மீனவர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை
மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்த போதும் மீனவர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மன்னார் மாவட்ட மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் ஏற்பாட்டில் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ் தலைமையில் இன்றைய தினம் (19) காலை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாச செயலாளர் என்.எம்.ஆலம், வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளர் அன்ரனி சங்கர், மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாச தலைவர் மரியதாஸ் குரூஸ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கலந்து கொண்டு மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மாதம் இறுதிப்பகுதியில் கொழும்பு கடற்பரப்பில் தீப்பிடித்த நிலையில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலிலிருந்து வெளியாகும் இரசாயன கழிவுகளினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி இதன் மூலம் இலங்கையின் அனைத்து மீனவர்களும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த இரசாயன கழிவுகளினால் கடலாமைகள் , திமிங்கிலம் போன்றவை வங்காலை, முள்ளிக்குளம், தாழ்வுபாடு போன்ற பகுதிகளில் உயிரிழந்து கரையொதுங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் எவ்வளவு காலத்திற்கு எமது கடல் வளங்கள் பாதிக்கப் போகின்றது.
இதனால் மீனவர்களின் நிலை என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்காமல் இந்த அரசாங்கம் மெத்தனப் போக்கை கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றது. அத்துடன் இந்தப் பயணத்தடை மூலம் பாதிப்பிற்கு உள்ளான மக்களைப் பாதுகாப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எரிபொருள் விலை ஏற்றத்தால் சிறு மீனவர்களும் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் மேலும் பல அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு ஆலோசனை நடந்து வருவதாகவும் அறிகின்றோம். இந்த விலையேற்றத்தின் ஊடாக அனைத்து மக்களையும் தற்கொலைக்குத் தள்ளக் கூடிய சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இன்னும் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. மீனவர்கள் செய்த சொந்த காப்புறுதிகளுக்குக் கூட இன்னும் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன் போது மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாச செயலாளர்
என்.எம்.ஆலம், வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளர் அன்ரனி
சங்கர், மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாச தலைவர் மரியதாஸ் குரூஸ் ராஜா
ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.