தமிழர்களின் அடையாளங்களை ராஜபக்ச அரசு சிதைக்க முயல்கிறது: சிவஞானம் சிறீதரன்
தமிழர்களின் அடையாளங்களை ராஜபக்ச அரசு சிதைத்து தமிழர்களின் வாழ்வுரிமையைக் கேள்விக்கு உள்ளாகுகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஜெயந்தி நகர் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு நிகழ்வும் புலமைப் பரிசில் சித்தியடைந்த சாதனையாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வின் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எங்களை மாறி மாறி வருகின்ற ஒவ்வொரு சிங்கள அரசுகளும் சரி இப்போது இராணுவ சிந்தனையோடு ஜனாதிபதியாக இருக்கின்றவரும் சரி அவருக்குக் கீழே இருக்கின்ற ஏனைய தரப்புக்களும் சரி இளைஞர்களை வேறு திசை நோக்கிக்கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள்.
எங்களின் அடிப்படை வாழும் உரிமையையே ஆட்டம் காண வைத்திருக்கிறது இந்த அரசு. எந்த நாளும் நிம்மதியற்ற சூழலில் விழிக்கின்ற சூழலை உருவாக்கி இருக்கின்றது.
இந்த நிலையில் தமிழ் இளைஞர்கள் உணர்வுகளுக்கு அப்பால் ஒரு இனம் பற்றிய சரியான சிந்தனையோடும் தமிழ்த் தேசிய இனமாக ஒரு தனித்துவ அடையாளத்தோடு எவ்வாறு வாழ்கின்றோம்? எங்களுடைய தனித்துவங்கள் எவ்வாறாகப் பேணப்பட வேண்டும்? ஏன் நாங்கள் இந்த மண்ணிலே இவ்வளவு காலமும் போராடினோம்? இவ்வளவு காலமும் இந்த மண்ணிலே எங்களுடைய வாழ்க்கையைப் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் கொண்டு சென்றோம் என்கிற எண்ணங்களை இளையவர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும்.
இன்று காலம் பல திசைகளை மாற்றுகிறது, எண்ணங்களை மாற்றுகிறது. எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் வசீகரித்து வேறு ஒரு துறைக்குக் கொண்டு செல்கிறார்கள். அந்த துறைகளை விட்டு வெளியே போக முடியாதவர்களாக நாங்கள் மாறுகிறோம்.
அவ்வாறு மாறுகிற போது கூட தன்னுடைய இருப்பை சரியாகத் தக்க வைத்துக்கொள்வதற்கும் அதற்காக சதா சிந்தித்துக் கொண்டு இருக்கின்ற இனமாக நாம் எங்களை மாற்ற வேண்டும்.
நாங்கள் கொஞ்சம் தமிழர்களாகச் சிந்தித்து விட்டோம் என்றால் எங்களை ஏமாற்றுபவர் வேறு ஒரு திசைக்கு எங்களை நகர்த்திச் சென்றால் அதிலிருந்து விடுபட்டு எங்கள் இலக்கின் பாதையிலே நாங்கள் செல்கின்றவர்களாக மாறவேண்டும்.
ஏன் என்றால் நாங்கள் ஒரு தனித்துவமான இனம், அடையாள எண்ணங்கள் சகல தனித்துவங்களையும் கொண்டவர்கள். கடந்த காலங்கள் பல அனுபவங்களை எமக்கு தந்திருக்கிறது.
அந்த அனுபவங்களுக்கூடாகத் தான் இன்று இருக்கின்ற இளைஞர்களிடம் அது மெல்ல மெல்ல நகர்த்தப்படுகிறது அல்லது இல்லாமல் செய்யப்படுகிறது. ஆகவே இளைஞர்கள் இந்த காலச் சூழலைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் பார்க்கின்ற இடங்களெல்லாம் தொல்லியல் திணைக்களம் தொல்பொருள் அடையாளங்களைத் தோண்டுகின்றோம் என்ற பெயரில் காணிகளைப் பிடிக்கிறது, எங்களுடைய இருப்பை கேள்விக்கு உட்படுத்துகிறது.
வன வளத்திணைக்களம் காணும் இடங்களை எல்லாம் தங்களுக்குரியது என எல்லை இடுகிறார்கள். வனஜீவராசிகள் திணைக்களமிருக்கின்ற பெரும் பகுதிகளை அடைத்து விடுகிறது.
இராணுவம் எங்கள் காணிகளை அடாத்தாகப் பிடித்து விவசாயம் செய்கிறார்கள். எங்களைப் பொருளாதார ரீதியிலும் முடக்க நினைக்கிறது அரசாங்கம்.
அரச நிறுவனங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக ஒரு தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக இருக்கின்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
எங்களின் கலாச்சார பண்பாடுகள் கூட கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. விளையாட்டு என்பது கூட ஒரு சிங்கள நடைமுறைகளிற்கும், சிங்கள கலாச்சாரத்துக்கு உட்பட்டதாக மாற்றப்படுகிறது.
அண்மையில் கிளிநொச்சியின் இளைஞர்கள் தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழ் சிங்கள மொழியில் மட்டும் இருப்பதால் வாங்கமுடியாது தங்கள் தாய் மொழியில் சான்றிதழ்கள் இருக்க வேண்டும் என்பதைக் கூறிவாங்க மறுத்தனர். இதனால் இவர்களைப் பாராட்ட வேண்டும்.
அவர்களின் நிராகரிப்பினூடாக தமிழ் மொழியில் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் எனும் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
சிங்கள மொழியாலும் சிங்கள கலாச்சாரத்தாலும் சிங்கள அரசினுடைய அரச இயந்திரத்தினாலும் நாங்கள் கபளீகரம் செய்யப்படுகிறோம் திசை மாற்றப்படுகிறோம்.
ஒரு இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்படுகிறோம்.எங்களின் உறவுகளை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன், கிளிநொச்சி இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் ரிசியந்தன், பிரதேச சபையின் உறுப்பினர், கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam