உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டம் ஜனாதிபதிக்கே ஆபத்தாக அமையலாம்: சிறிதரன்
உத்தேச ஒளிபரப்பு ஒழுங்கு படுத்தல் சட்டத்தின் மூலம் ஊடகத்துறையை நசுக்கினால் அது ஜனாதிபதிக்கே ஆபத்தாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
உத்தேச ஒலி மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலத்தை சட்டமாக்க இடமளித்தால் அது ஊடகத்துறையின் சுதந்திரம் பாதிக்கப் படுதல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு ஜனநாயக நாட்டில் மிகப்பெரிய தூணாக இருப்பது ஊடகத்துறை. ஊடகத்துறை மூலமே ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.
இந்த அரசானது ஊடகத்துறையை நசுக்கி அதை அடக்க நினைத்தால் அது அந்தநாட்டுக்குதான் அபகீர்த்தியை ஏற்படுத்தும்.
ஏற்கனவே ஊடகங்கள் மீது பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டு செய்திகள் வெளிவர முடியாது இருந்தன.
அவ்வாறானதொரு நிலையை கொண்டு வந்து நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்கு கொண்டு வந்தால் அது அவருக்கே இருண்ட யுகத்தை அளிக்கும். இந்த சட்டத்தை நாம் எதிர்க்கின்றோம் தொடர்ந்தும் அந்த சட்டமூலத்திற்கு எதிரான எதிர்ப்பை நாங்கள் பதிவு செய்வோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |