அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கி செல்வது ஆபத்தானது! எச்சரிக்கும் எம்.பி
இந்த அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கி செல்வது ஆபத்தானது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் கவனம்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
திருகோணமலை மாவட்ட கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான உப குழு கூட்டம் திங்கள்,செவ்வாய் ஆகிய தினங்களில் ஆளுங்கட்சியின் ரொஷான் அக்மீமன எம்பியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்கோ குகதாசன் எம். பி க்கோ இந்த கூட்டத்திற்கு அழைப்பு இல்லை. மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்க்கட்சியின் வசம் இருப்பதால் உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்களுக்கும் அழைப்பு இல்லை.
தனியொரு எம்.பியால் அதிகாரிகளை வைத்து இந்த கூட்டம் நடைபெறுகின்றது. இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்து சொல்வதற்கான வாய்ப்பை இந்த அரசாங்கம் முடக்கியுள்ளது.
இதன் மூலம் இந்த அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கி செல்வது தெளிவாகின்றது. இது ஆபத்தான விடயமாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கி செல்வது குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.