இன்று முதல் முடங்கும் அரச வைத்திய சேவை: அதிகாரிகள் எடுத்த முக்கிய முடிவு
நியாயமற்ற இடமாற்ற முறையைக் கண்டித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று(04) காலை 8 மணி முதல் மீண்டும் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
அரச வைத்தியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் முறையற்ற இடமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமா? அல்லது அடையாளப் போராட்டமாக அமையுமா? என்பது குறித்து இன்று(04.04.2026) கூடவுள்ள சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு தொடரும் அபாயம்
இன்று காலை 8 மணி முதல் ஆரம்பமாகவுள்ள இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளிப் பிரிவு மற்றும் ஏனைய கிளினிக் சேவைகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு வரும் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும்.
சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் ஏற்கனவே இடம்பெற்ற பேச்சுகளில் சாதகமான தீர்வு எட்டப்படாத நிலையிலேயே, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இன்றைய மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர், போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.