18 மணிநேர நீர்வெட்டு..! கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்வெட்டு இன்றும் (04.04.2026) தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடையை 24 மணித்தியாலங்களில் இருந்து 18 மணித்தியாலங்களாகக் குறைக்கும் நடவடிக்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நேற்று (03.04.2026) அறிவித்துள்ளது.
நீர்வெட்டு
இதன்படி, கால அட்டவணைக்கு அமைவாக எதிர்வரும் 10ஆம் திகதி வரை அந்தப் பகுதிகளில் அவ்வப்போது நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளது.
பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய உள்ளிட்ட சில பகுதிகளில் இந்தத் திட்டமிடப்பட்ட நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய முதற்கட்டத்தின் கீழ், பாதுக்கை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.00 மணி முதல் நேற்று பிற்பகல் 2.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
இதேவேளை, ஹோமாகம பகுதியில் நேற்று (03) இரவு 8.00 மணி முதல் இன்று (04) பிற்பகல் 2.00 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
இரவு 8.00 மணி முதல் நடைமுறை
பெலன்வத்தை பகுதியில் இன்று (04) இரவு 8.00 மணி முதல் நாளை அதாவது ஏப்ரல் 5ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி வரை நீர்வெட்டு நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதுக்கை, ஹோமாகம மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த நீர்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பத்தரமுல்ல, பாமன்கடை, வெள்ளவத்தை மற்றும் நாவல ஆகிய பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
எவ்வாறாயினும், நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாத நாட்களில் தடையின்றி நீர் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.