நெல்லிற்கான விலையை அதிகரிக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
விவசாயிகளின் விவசாயத்திற்கான செலவு அதிகரித்துள்ள நிலையில் நெல்லிற்கான விலையினை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று (06.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் அரசியல் நாடகத்தினை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் கோரிக்கைகள்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
தற்போது அறுவடைகாலம் தொடங்கியுள்ளதன் காரணமாக உடனடியாக நெல் கொள்வனவை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும். அத்துடன் நெல்லின் விலையானது அதிகரிக்கப்பட வேண்டும். இதே போன்று கிரிமிநாசினிகளுக்கான விலைகள் குறைக்கப்பட வேண்டும்.
இன்றுள்ள சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோகத்தில் ஒரு ஏக்கர் விவசாயம் செய்வதற்கு ஒன்றரை இலட்சம் ரூபா செலவு ஏற்படுகின்றது.
விவசாயிகளின் செலவு அதிகரித்துள்ளதன் காரணமாக அரசாங்கம் இதனை கவனத்தில்கொண்டு நெல்லிற்கான விலை அதிகரிப்பு தொடர்பில் விவசாயிகள் விடுத்துவரும் கோரிக்கையினை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.
உள்ளுராட்சி மன்றங்கள்
இலங்கை அரசாங்கம் உள்ளுராட்சி மன்றங்கள் குறித்து மேற்கொள்ளும் அரசியல் நாடகத்தினை உடனடியாக நிறுத்தவேண்டும். உள்ளுராட்சி மன்றங்களுக்கு மக்கள் நான்கு வருடம் ஆணை வழங்கியுள்ளார்கள்.
அந்த நான்கு வருடத்திற்குரிய ஆணையை வாக்களிப்பின் ஊடாக தமதுக்கு விரும்பிய பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் ஆணையை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளது. இதுவொரு அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
மக்கள் வழங்கிய ஆணை வழங்கிய காலத்தினை நீடிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் என்பது இலங்கை அரசாங்கத்திற்கு சார்பான ஒரு அரசியல் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு மேற்கொள்ளும் சதியாகும். மக்கள் இதற்காக ஆணை வழங்கவில்லை.இறைமையுள்ள அரசாங்மானது மக்கள் ஆணையை மதிக்கவேண்டும்.
நான்கு வருடம் உள்ளுராட்சிமன்றங்களுக்கு வழங்கிய மக்கள் ஆணையை இலங்கை அரசாங்கம் மீறல் முற்படும் நிலையென்பது கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.
மக்கள் ஆணையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடாத்துவதே அந்தஆணைக்கு கொடுக்கும் மதிப்பாகும். இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள சதிவலையில் சிக்கிவிடாமல் தேர்தல்களை நடாத்துவதற்கான அழுத்தங்களை மக்கள் விடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |