நுவரெலியாவில் போராட்டத்தில் குதித்த வைத்தியர்கள் : மக்கள் பெரும் அவதி
பேச்சுவார்த்தைகளின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டதாகக் குற்றம் சாட்டி, சுகாதார அமைச்சகம் முன்னர் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை மீறி உள்ளக மருத்துவப் பயிற்சி மருத்துவர் நியமனங்களை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இந்த போராட்டம் இன்று (09.04.2026) காலை நடைபெற்றது.
கறுப்பு கொடி பறக்கவிட்டு போராட்டம்
இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் பணிப்பகிஷ்கரிப்பு எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது வைத்தியசாலை வளாகம் முழுவதும் கறுப்பு கொடிகள் பறக்கவிட்டு, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகளின் இந்த எதிர்ப்பு போராட்டம் காரணமாக, வெளிநோயாளர் பிரிவு முற்றாக செயலிழந்தது. மேலும், கிளினிக் சேவைகள் இயங்கவில்லை.
அவதிக்குள்ளான நோயாளிகள்
அவசர சிகிச்சை பிரிவுகளை தவிர, சாதாரண நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்ட போதும், விபத்து, அவசர சிகிச்சை, மகப்பேறு பிரிவுகள் வழமைப்படி இயங்குகின்றன.

தூர இடங்களில் இருந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் போன்ற பல்தரப்பட்டவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு, தொடர்ச்சியாக நடத்தப்படும் வைத்தியர்களின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

