இந்த அரசாங்கம் இன்று வெற்று அரசாங்கமாக மாறியுள்ளது - சிறீதரன் (Photos)
இந்த அரசாங்கம் இன்று வெற்று அரசாங்கமாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Sreedharan) தெரிவித்துள்ளார்.
பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சனை வரவேற்கும் நிகழ்வு இன்றைய தினம் பூநகரி பிரதேச சபையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சின்னக் குழந்தைகளைக்கூட பட்டினி போட்டு சாகடிக்கும் ஒரு நிலையை இந்த அரசாங்கம் உருவாக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. குடிக்கும் பால்மா கூட அளவிற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு போயிருக்கிறது.
சொந்த மக்களையே சொந்த மக்களின் குழந்தைகளையே கொல்லுகின்ற சூழலுக்கு இந்த அரசாங்கத்தினுடைய நிலை மாறி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சிற்றுண்டிகள் உரிமையாளர் சங்கம் பால்த் தேநீர், தேநீர் கடைகளில் கேட்க வேண்டாம் என்று இலங்கையில் தேநீர் கூட குடிக்க முடியாத அளவிற்கு நிலை மாறி இருக்கிறது.
இந்த அரசாங்கம் பிரதேச சபைகளின் உடைய அதிகாரங்களை மீளப்பறிக்கின்ற முயற்சியில் இந்த அரசாங்கம் ஈடுபட்டு கொண்டு இருக்கிறது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரதேச சபைகள் ஊடாகவே பணிகளை ஆற்றி வந்தார்கள். இப்போது அவர்களை சுகாதார அமைச்சோடு இணைத்திருக்கிறார்கள். அதேபோன்று உள்ளூராட்சி சபைகளின் பொதுச் சுகாதார செயற்பாடுகளையும், மத்திய சுகாதார அமைச்சிற்கு கீழ் கொண்டு வருவதற்கு முயல்கிறார்கள்.
சுகாதார அமைச்சுக்கு கீழே பொதுச் சுகாதாரபணிகளை உள்வாங்கினால் பிரதேச சபைகளினுடைய சுகாதார நடவடிக்கைகள் செயற்பாடுகள் அவர்களின் மக்களுக்கான பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும்.
ஒரு குறுநில அடிப்படையில் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிப்பது ஒரு துர்ப்பாக்கியம் ஆகும்.
இந்த அரசாங்கத்தினுடைய போக்குகள் இராணுவ ரீதியாகவும், முழு இராணுவ சிந்தனையோடும் நடைபெறுகின்ற காரணத்தினால் மக்களுக்கான பணிகள் அற்று ஒரு வெற்று அரசாங்கமாக இராசி இல்லாத அல்லது மக்களால் விரும்பப்படாத ஒரு தலைவனாக இந்த நாட்டினுடைய ஜனாதிபதி மாறியிருக்கிறார்.
மக்களால் விரக்தியடைந்திருக்கின்ற இந்த அரசாங்கம் தன்னுடைய செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். மக்களின் விருப்பங்களின் அடிப்படையில் மக்களின் எண்ணங்களின் அடிப்படையில் செயற்படவேண்டும்.
இந்த நாட்டில் இரண்டு தேசிய இனங்கள் உண்டு ஒன்று தமிழ்த் தேசிய இனம் மற்றையது சிங்கள தேசிய இனத்திற்கு உள்ளது போன்ற கலை கலாச்சாரம் பண்பாடு மொழி அடையாளங்கள் போன்றன தமிழ்த் தேசிய இனத்திற்கும் உண்டு.
சிங்கள தேசிய இனத்திற்கு முன்பாக பல ஆயிரம் ஆண்டுகள் பூர்வீகமாக வரலாற்று ரீதியாக மொழி அடையாளங்களோடும், நில அடையாளங்களோடும் பஞ்ச ஈச்சரங்களை வைத்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.
ஆகவே அவர்களின் இழந்து போன இறைமையை வழங்கி அவர்களையும் அணைத்து இந்த நாட்டிலே தேசிய அரசியல் நீரோட்டதைக் கொண்டு சென்றால் இந்த நாட்டின் பொருளாதாரம் மட்டும் அல்ல இந்த நாட்டின் இன ஒற்றுமையும், நாடும் வளர்ச்சி அடையும்.
இவற்றை புரிந்து கொண்டு இந்த அரசாங்கம் தமிழர்களின் அபிலாசைகளை புரிந்து கொண்டு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.




செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri