தமிழர் என்ற புறக்கணிப்பை காட்டும் அரசாங்கம்: ரவிகரன் ஆதங்கம்
அந்நியரை ஆதிக்கத்தில் இருந்து விரட்டியடித்த ஒரு வீரனை நினைவு கூராமல் அரசாங்கம் இதிலும் தமிழர் என்ற புறக்கணிப்பை காட்டி நிற்கின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஒல்லாந்தர் கோட்டையை போரிட்டு வெற்றி கொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 220 ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவு கூரல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(25.08.2023) முல்லைத்தீவு நகரில் உள்ள பண்டாரவன்னியனின் திருவுருவச் சிலையடியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழர் பாகுபாடு
“இன்றையதினம் தமிழர்களுடைய வீர முத்திரை பதிக்கப்பட்ட நாள். அதாவது பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஆங்கிலேயரினுடைய கோட்டைக்குள் புகுந்து பீரங்கிகளை கைப்பற்றி அவர்களிடத்தே கனரக ஆயுதங்களோடு இந்த இடங்களை ஆக்கிரமித்து இருந்த வேளை அந்த நேரம் இருந்த வாள், அம்பு, வில் இப்படியாக தங்களிடம் இருந்த ஆயுதங்கள் மூலம் மாவட்ட செயலகத்திற்கு முன்னாளிருந்த ஆங்கிலேயருடைய கோட்டைக்குள் புகுந்து பீரங்கிகளை கைப்பற்றிய தினம் இன்றைய தினம் ஆகும்.
இப்படிப்பட்ட ஆங்கிலேயரிடம் இருந்து சாதனை புரிந்த தமிழனை சாதாரணமாக நினைவுகூருகின்றோம்.
ஆனால் இலங்கை அரசானது இப்படிப்பட்ட தமிழனை கௌரவிக்க வேண்டும் என்றோ நல்ல முறையில் விழா எடுக்க வேண்டும் என்றோ சிந்தித்தது கிடையாது.
அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விரட்டியடித்த ஒரு வீரனை நினைவு கூராமல் அரசாங்கம் இதிலும் தமிழர் என்ற புறக்கணிப்பை காட்டி நிற்பது தெரிகிறது. இருந்தாலும் நாங்கள் நிச்சயமாக நினைவு கூருவோம்.
அதற்கேற்ப இன்று பண்டாரவன்னியனுடைய வெற்றி நாளை நினைவு கூர்ந்திருக்கின்றோம்”என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இ.ஜெகதீசன், தமிழரசு கட்சியின் உறுப்பினர்களான கி.சிவகுரு, இ.ஜெரோன்சன், மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் அஞ்சலியும் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.









