பிரதமருக்கும், ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்குமிடையில் விரைவில் விசேட சந்திப்பு
அடுத்த மாதம் பாதீட்டில் முன்மொழியப்பட்ட தீர்வுகள் குறித்து விவாதிக்க, பாதீட்டுக்கு முன்னர் பிரதமருக்கும், ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை அரசாங்கம் ஏற்பாடு செய்யும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) கூறியுள்ளார்.
பிரதமருக்கு வசதியான நேரத்தில், இந்தக் கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்வதாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க(Anurakumara Dissanayake), எழுப்பிய கேள்வியில், அடுத்த மாதம் பாதீட்டில், அறிவிக்கப்பட வேண்டிய முன்மொழிவுகளை விவாதிக்க பிரதமர் மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய முடியுமா எனக் கேட்டார்.
அத்தகைய கூட்டத்தை பாதீட்டுக்கு முன்னதாக ஏற்பாடு செய்து தீர்வுகளைப் பற்றி தொழிற்சங்கங்களுக்கு அறிவித்தால், ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையிலிருந்து விலகி கற்பித்தலை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உதவும் என்றும், முன்மொழிவுகளுடன் உடன்படவில்லை என்றால் அவற்றின் திருத்தங்களையும், பாதீட்டில் முன்மொழியலாம்," என்றும் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் வழங்கிய தினேஷ் குணவர்தன, எந்த நேரத்திலும் விவாதத்திற்கு, பிரதமர் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இதேவேளை, ஆசிரியர், அதிபர் பிரச்சனைகளுக்கு நிதியமைச்சர் பொருத்தமான திட்டங்களை முன்வைப்பார் என்றும் ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோசனை சேவை மற்றும் முதன்மை சேவைகளை மூடிய சேவைகளாக அறிவிப்பார் என்றும் அமைச்சர் குணவர்தன கூறியுள்ளார்.