வடக்கில் சில துறைகளுக்கு மேலும் கவனம் தேவை! வட மாகாண ஆளுநர்
வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கி செயற்பட்டு வருவதுடன், வடக்கு மாகாணத்தில் முதலீடு, விவசாய உற்பத்திக்கு பெறுமதி சேர்த்தல் ஆகிய துறைகளில் மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
அதேவேளை, வடக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதுடன், தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகள் விரைவாகக் கிடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஷேபிள் மார்ட்டின் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஷேபிள் மார்ட்டினுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (20.08.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை
சந்திப்பின்போது ஆளுநர், உயர்ஸ்தானிகரை அன்புடன் வரவேற்று, வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
இதன்போது, டித்வா பேரிடருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆளுநர் விரிவாக விளக்கமளித்தார்.
பாதிப்புகளுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ள மீள்கட்டுமானப் பணிகளுக்கு அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், அவற்றைத் தேவைக்கேற்ப தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டித்வா பேரிடர் காரணமாக வடக்கு மாகாணம் இழப்புகளை எதிர்கொண்டிருந்த போதிலும், மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன முகாமைத்துவத்தின் பலனாக இம்முறை சிறுபோகத்தில் அதிகளவிலான நெல் விளைச்சலைப் பெற்றுள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
அதிகரித்துள்ள நெல் உற்பத்தியை விவசாயிகளுக்கு பொருளாதாரப் பயனாக மாற்றுவதற்காக நெல் சந்தைப்படுத்தல் மற்றும் கொள்வனவு தொடர்பான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள்
அதேவேளை, வடக்கு மாகாணத்தில் கிடைக்கப்பெறும் விவசாய உற்பத்திகளை மூலப்பொருட்களாக மாத்திரம் சந்தைப்படுத்தாமல், அவற்றைப் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக மாற்றி சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள் மற்றும் வாய்ப்புகள் இன்னமும் போதியளவில் உருவாக்கப்படாத நிலை காணப்படுவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்தத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள் தொடர்பான முன்னேற்றங்களையும் ஆளுநர், உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார். இவ்வலயங்கள் மாகாணத்தின் முதலீட்டு சூழலை விரிவுபடுத்துவதற்கும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பங்களிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு மாகாணத்தின் சமகால சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இருதரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வு, செம்மணி விவகாரம், வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை விடுவிக்கும் செயன்முறை, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி, நல்லிணக்க முயற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் ஆளுநருடன் கலந்துரையாடினார்.

நடைபயணமாக அழைத்து வரும் ஷிரான் பாசிக்கின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்றம் பொலிஸாருக்கு பிறப்பித்த உத்தரவு