கோட்டாபயவின் புதிய அமைச்சரவையில் சர்ச்சைக்குரியவர்!
இலங்கையில் அடுத்த வாரம் மீளமைக்கப்படவுள்ளதாக கூறப்படும் அமைச்சரவையில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அண்மையில் நாடாளுமன்றத்தில் தகாத வார்த்தை பிரயோகம் தொடர்பில் சர்ச்சைக்குள்ளாகியிருந்த திஸ்ஸ குட்டியாராச்சியின் பெயரும் உள்ளடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இதனை திஸ்ஸ குட்டியராச்சி மறுத்துள்ளார். தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிலையே போதுமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் அதிருப்தியாளர்கள் சிலரையும் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இது தொடர்பான கலந்துரையாடல்கள், முன்னேற்றமான முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தைரியத்திலேயே அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெளியேறுமாறு அரசாங்கத்தரப்பினர் கோரி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.