கோட்டாபயவை பிரதமராக்குவதற்கு முயற்சி! நாமல் ராஜபக்சவை புறக்கணித்து நடத்தப்பட்டுள்ள கலந்துரையாடல்-செய்திகளின் தொகுப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் பதவிக்கு கொண்டு வருவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
மொட்டு கட்சியின் தெரிவு செய்யப்பட்ட சிலரை மட்டும் அழைத்து பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில்,விருந்தும் கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கலந்துகொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக நியமிப்பதற்காக, பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவரை பதவி விலக்கி கோட்டாபய ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து அவரை பிரதமராக்குவது தொடர்பில் சில கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
கட்சியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு குழுவினரே அழைக்கப்பட்டிருந்ததோடு நாமல் ராஜபக்ஷ எம்.பி.க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருந்தை கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமான அரசியல்வாதி ஒருவரே ஏற்பாடு செய்திருந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
