கோட்டாபயவுக்கும் ரணிலுக்கும் மக்கள் ஆணை இல்லை! மைத்திரிபால சிறிசேன
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசி்ங்க ஆகியோருக்கு மக்கள் ஆணை இல்லை என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
19வது திருத்தச்சட்டம்
18வது திருத்தச் சட்டம் பெற்றுக்கொண்ட அளவு கடந்த அதிகாரங்களை 19வது திருத்தச்சட்டம் மூலம் நாங்கள் ரத்துச் செய்தோம். ஆனால் 20வது திருத்தச் சட்டம் மூலம் மீண்டும் அதனைப் பெற்றுக்கொண்ட ராஜபக்ச குடும்பத்தின் அதிகார மோகம் தான் இன்றைய நெருக்கடிகள் எல்லாவற்றுக்கும் காரணம். அவர்களால் தான் நாட்டுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு மக்களின் ஆணை இல்லை. எனவே அவர்களின் உத்தரவுகள் இனியும் செல்லுபடியாகப் போவதில்லை.
இந்நிலையில் அறவழியில் போராடும் இளைஞர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கவோ, ஆயுதமுனையில் அவர்களை அடக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவோ வேண்டாம் என்று நான் முப்படைகளின் தளபதிகளையும் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.