கோவிட் ஒழிப்பு செயலணியுடனான தொடர்பை துண்டித்தது GMOA!
கோவிட் பெருந்தொற்று ஒழிப்பு தேசிய செலணியுடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்வதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பிரிவு உறுப்பினர் டொக்டர் நலிந்த ஹேரத் இந்த விடயத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுகையை உறுதி செய்யுமாறு தாங்கள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் வழங்கிய பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்துவது கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு பரிந்துரை வழங்கினாலும் அதன் இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கோவிட் ஒழிப்பு செலணியின் பொறுப்பாளரின் கைகளில் தங்கியிருப்பதாகவும் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் தாங்கள் கோவிட் ஒழிப்பு செயலணியுடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இந்த செயலணியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு சில காலம் கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
