பௌத்த பிக்குவால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி!நீதி கோரி போராட்டம்
அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
,வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு" அமைப்பினால் இன்று(27.5.2026) கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒன்று கூடிய பெண்கள் ஊர்வலமாக சென்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் "பிக்குவினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனுராதபுரம் சிறுமிக்கு நீதி வழங்குக, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை நிலைநாட்டுங்கள், மதத்தின் பெயரால் பாலியல்குற்றவாளிகளை பாதுகாக்கவேண்டாம், சட்டத்தினால் மறுக்கப்பட்ட பாலியல் வன்கொடுக்குமைக்கு பிணை கிடையானது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பெரிய பதாதைகளை ஏந்தியவாறு தங்களது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிக்குவிற்கு எதிராக சட்டம் பாகுபாடின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மனு கையளிப்பு
பெண்களுக்கு எதிரான, குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாட்டில் அதிகரித்துவரும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பை அரசு பலப்படுத்த வேண்டும்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவர்கள் உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
இதன்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்தில் மனு கையளிக்கப்பட்டது.





