இலங்கை தமிழர்கள் மீது இடம்பெற்ற இனப்படுகொலை - பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சூடான விவாதம்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் ஒன்று (Back bench Debate) நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்திற்கான முன்னெடுப்புக்களை பிரித்தானியத் தமிழர் பேரவையினர், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவினூடாக (APPG forTamils) முன்னெடுத்திருந்தது.
கடந்த 11ஆம் திகதி பெப்ரவரி மாதம் ந டைபெறவிருந்த இந்த விவாதமானது நாடாளுமன்றத்தில் வேறு ஒரு அவசர நிகழ்வால் மாற்றப்பட்டு இன்றைய தினம் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதமானது தொழில் கட்சியைச் சேர்ந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவின் உபதலைவர் சிவோன் மாக்டோனாவின் (Siobhain McDonagh MP) முன்னேற்பாட்டில் பிரித்தானியத் தமிழர் பேரவையின் வேண்டுகோளின் பிரகாரம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொன் செர்வ்டிவ் கட்சியைச் சேர்ந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவர் எலியட் கோல்பேர்ண் (ElliotColburn MP) மற்றும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழு உபதலைவர் சேர் எட் டேவி (Sir Ed Davy MP) ஆகியோரால் அனுசரணை வழங்கப்பட்டு மேலும் பல அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் (Backbench Debate) நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவாதத்தில் கலந்து கொள்கின்ற அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரித்தானிய அரசாங்கத்தால் இலங்கை மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அழுத்தங்கள் மற்றும் இலங்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கிய ஆவணங்கள் பிரித்தானியத் தமிழர் பேரவை சார்பாக ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே என்பதனையும், தமிழர்களுக்கான ஒரு வலிமையான அரசியல் தீர்வினை பிரித்தானியா ஏனைய நாடுகளுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் எனவும், இலங்கை மீது பொருளாதாரத் தடை, இன அழிப்பு போன்ற மோசமான குற்றமிழைத்தவர்கள் மீது பயணத் தடை, சொத்து முடக்கம் ஆகியவை உள்ளடங்கலாகப் பல விடயங்கள் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
