உயிரழிப்பு மட்டுமல்ல பொருளாதாரம், மொழி, கலாச்சாரம், இனப்பரம்பல் அழிப்பும் இனப்படுகொலைதான்: சி.அ.யோதிலிங்கம்
இனப்படுகொலை என்பது வெறுமனே உயிர்களை அழிப்பது மட்டுமல்ல, பொருளாதாரம், மொழி, கலாச்சாரம், இனப்பரம்பல், என்பவை அழிப்பும் இனப்படுகொலைதான் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் பேச்சுக்கு வந்திருக்காது என வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் தெரிவித்த கருத்திற்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
''வெளிநாட்டு அமைச்சினுடைய செயலாளர் இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்று கூறியிருக்கிறார். அவ்வாறு நடக்காதமையினால் தான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்முடன் பேச்சு வார்த்தைக்கு வந்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்தை நிராகரித்து தமிழ் தரப்பிலிருந்து எந்தவிதமான கருத்தும் இதுவரை வரவில்லை. அது கவலைக்குரிய விடயமாகும். இனப்படுகொலை நடைபெறவில்லை என்பதைச் செயலாளர் ஒருபோதும் தீர்மானிக்க முடியாது. இனப்படுகொலை நடைபெறவில்லை என்றால் அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றிருக்க வேண்டும்.
விசாரணையின் முடிவில் தான் இனப்படுகொலை நடைபெறவில்லை என்ற முடிவுக்கு வரமுடியும். அதுவும் உள்ளூர் நீதி செயற்பாடுகளின் ஊடாக, நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக, அதற்கு தீர்வு காண முடியாது. இயற்கை நீதி கோட்பாடுகளின்படி குற்றம் செய்தவனே நீதிபதியாக இருக்க முடியாது.
ஆகவே சர்வதேச நீதி செயற்பாட்டின் அடிப்படையில் தான் உண்மையிலே இதற்கான ஒரு தீர்வை நாம் காணவேண்டும். ஆகவே சர்வதேச நீதி அடிப்படையில் இன அழிப்பு நடைபெற்று இருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பாக ஒரு விசாரணையை நடாத்தி அதற்குப் பிறகு அவர் இந்த தீர்மானத்திற்கு வந்திருந்தால் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.
இனப்படுகொலை என்பது வெறுமனே உயிர்களைப் படுகொலை செய்வது மட்டுமில்லை. நீண்டகாலமாகத் தமிழ் மக்களுடைய இருப்பை அழிப்பதும் இனப்படுகொலைதான், ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மொழி புறக்கணிப்பு நடைபெற்றிருக்கிறது. பொருளாதார அழிப்பு நடைபெற்றிருக்கிறது. கலாச்சார புறக்கணிப்பு நடைபெற்றிருக்கிறது.
அதனுடைய உச்ச வடிவமாக உயிரிழப்பு நடந்திருக்கிறது. இன அழிப்பு நடைபெற்றிருக்கிறது என்பதை இன்றைக்குச் சர்வதேச ரீதியாக ஐ.நா நிபுணர் குழு அறிக்கைகளிலும் ஏற்றுக்கொண்ட நிலை காணப்படுகிறது.
ஆகவே இந்த இன அழிப்பு நடைபெற்றது என்பதை, அதற்காக சான்றுகளை, அதற்கான
ஆதாரங்களை, அதற்கான செயல் திட்டங்களை, தமிழ்த் தரப்புக்கள் உடனடியாக அதில்
ஈடுபட்டு அதன் ஊடாகத் தான் இவ்வாறான கருத்துக்களுக்கெல்லாம் பதிலடி
கொடுக்கின்ற சூழலை உருவாக்கலாம் என நான் நினைக்கின்றேன்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri
