காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத் தலைவியை விடுதலை செய்க : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என யாழ். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் தலைவி இளங்கோதை தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி தொடர்பில் இன்று(06.01.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அராஜகமான முறையில் கைது
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீண்ட காலமாக காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை விடுவியுங்கள், காண்பியுங்கள் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். அரசாங்கத்திடம் வேறு எதையும் கேட்கவில்லை பணமோ நஷ்ட ஈடோ நாங்கள் கேட்கவில்லை.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு நேற்றைய தினம்(05) வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி ஜெனிற்றாவை பலவந்தமாக இழுத்துச் சென்று பொலிஸார் அராஜகமான முறையில் கைது செய்துள்ளனர்.
இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவரை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே ஒரு பௌத்த மத குரு தமிழர்கள் அனைவரையும் வெட்டிக் கொல்லுவேன் என வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால் அவரை இன்றுவரை கைது செய்யவில்லை.
விடுதலை செய்ய கோரிக்கை
அவ்வாறானவர்களை விடுத்து ஜனநாயக ரீதியில் எமது பிள்ளைகளை கேட்டு போராடுகின்ற எங்களை கைது செய்கின்றமையானது அரசாங்கம் கொடூரமான ஆட்சியை செய்கின்றது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
எனவே நேற்று(05) வவுனியாவில் கைது செய்யப்பட்ட எமது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி ஜெனிற்றாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |