அடுத்தடுத்து வெடிக்கும் கேஸ் சிலிண்டர்! - பொலிஸ்மா அதிபர் எடுத்துள்ள நடவடிக்கை
சமையல் எரிவாயு கசிவு, தீப்பற்றல் அல்லது வெடித்தல் ஆகிய சம்பவங்களினால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்கான பொலிஸ் ஒருங்கிணைப்பு அதிகாரியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபா் டி.எம்.டப்ள்யூ.தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபரால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியினால் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தென்னக்கோனுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
அதற்கமைய, சம்பந்தபட்ட அதிகாரிகளினால் வட்ஸ் அப்பினூடாக எரிவாயு அனர்த்தங்களின் படங்கள் மற்றும் பிற விவரங்களை அனுப்பிவிரைவில் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ,அதுதொடர்பான முறைப்பாடுகள் மூன்று நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிவாயு கசிவு மற்றும் தீப்பரவல் குறித்த நிலமையை ஆராய்வதற்கான மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேராசிரியர் ஷாந்த வல்பலகே இதனைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.