யாழில் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட திருடர் குழு
யாழ்ப்பாணம் (Jaffna) தீவகப்பகுதியில் நீண்ட காலமாக திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழுவொன்று மக்களது முயற்சியால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் வேலணை 6 ஆம் வட்டாரம் சங்கத்தார்கேணி பகுதியில் நேற்று இரவு (16.04.2025) 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததுடன்..
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வேலணை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் திருட்டுத்தனமாக பிடிக்கப்பட்ட ஆடுகள் ஒரு தொகுதி, வேலணை 6 ஆம் வட்டாரம் சங்கத்தார்கேணி பகுதியிலுள்ள குறித்த திருட்டுக் கும்பலின் சந்தேக நபராக கருதப்படும் ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த ஆடுகளை வெளியூரைச் சேர்ந்த சிலரின் ஒத்துழைப்புடன் நேற்று இரவு வாகனம் மூலமக யாழ்ப்பாணத்துக்கு சட்டவிரோதமாக கடத்தி செல்லும் முயற்சியில் குறித்த குழு இறங்கியுள்ளது.
இதன்படி குறித்த திருட்டுக் குழு நேற்று இரவு 8 மணியளவில் 6 ஆடுகளை குறித்த வாகனத்தில் ஏற்றும் சந்தர்ப்பத்தில் அதை சிலர் கண்டு சந்தேகித்து சம்பவம் தொடர்பில் ஊரிலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததுடன் அந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற ஆடுகளை பறிகொடுத்த உரிமையாளர்கள் குறித்த இடத்துக்கு வந்திருந்த நிலையில் அங்கிருந்த மக்களது ஒத்துழைப்புடன் களவாக பிடிக்கப்பட்டு கடத்திச் செல்ல வாகனத்தில் ஏற்றப்பட்ட 6 ஆடுகள், வாகனம் மற்றும் இரண்டு சந்தேக நபர்களையும் பிடித்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த ஒருவர் தப்பி ஓடியுள்ள நிலையில் பிடிபட்ட இருவரையும் பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
தீவக பகுதியில் கட்டாக்காலி கால்நடைகள், வளர்ப்பு கால்நடைகள் என நாளாந்தம் பல கால்நடைகள் களவாடப்படுவதும் இறைச்சிக்காக கொல்லப்படுவதுமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நிலையில் அது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் துறைசார் தரபினருக்கு முறையிட்டும் கூட அத்திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாது திருட்டு சம்பவங்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் நேற்றையதினம் வேலணை பொதுமக்களாகிய தாம் ஒன்றிணைந்து கையும் களவுமாக பிடித்துள்ளமையானது மக்கள் மத்தியில் குறித்த திருட்டு சம்பவங்களுக்கு தீர்வை எட்டமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே குறித்த இரு சந்தேக நபர்களுடன் 6 ஆடுகள் மற்றும் வாகனமும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர்களுடன் சான்றுப் பொருட்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

