பசில் ராஜபக்சவின் மல்வானை வீட்டின் மீதும் தாக்குதல் (Video)
கொழும்பு அலரி மாளிகைக்கு எதிரில் மற்றும் காலிமுகத் திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றும் இன்றும் பொதுமக்கள் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கம்பஹா மாவட்டம் மல்வானையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான வீடு என கூறப்படும் வீட்டின் மீது இன்று முற்பகல், பிரதேச மக்கள் சென்று தாக்குதல் நடத்தி , வீட்டுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
வீடு அமைந்துள்ள தோட்டத்திற்குள் சென்ற மக்கள் கல், மற்றும் பொல்லுங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டுக்கு தீயிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான இந்த காணியில் மக்கள் வந்து வீடுகளை அமைத்து குடியேற வேண்டும் எனவும் தாக்குதல் நடத்த சென்றிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற போது, விசேட அதிரடிப்படையினர் அங்கு இருந்ததுடன் மக்கள் தாக்குதல் நடத்தும் போது, அவர்கள் அதனை தடுக்க நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
அரச பணத்தை தவறான முறையில் பயன்படுத்தி, மல்வனை பிரதேசத்தில் மிகப் பெரிய காணி ஒன்றை கொள்வனவு செய்து, அதில் ஆடம்பர வீடு மற்றும் நீச்சல் குளத்தை நிர்மாணித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது உறவினர் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்ககது.