கஜேந்திரகுமாரின் ஜெனிவா கடிதத்தில் மௌனித்த இன அழிப்பு விவகாரம்!
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட தரப்பினர் நாடாளுமன்றத்திலும், தேர்தல் பிரசாரங்களிலும் நிகழ்த்திய உரைகளின் போது கூறிய “இன அழிப்பு” என்பது, உயிரோட்டமாகவும் முதன்மையாகவும் ஜெனிவாவுக்கு அனுப்பிய கடிதத்தில் இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தொடர்ந்த திட்டங்களை பின்தொடர்வதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் வெளிப்படுத்திய கருத்துக்கள் தமிழர்கள் மீதான இன அழிப்பை தமிழ்தேசிய கட்சிகள் புறக்கணிக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்புகின்றது.
கஜேந்திரகுமார் - சுமந்திரன்
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பத்திரிக்கையாளர் அ.நிக்சன், “நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை முதன்மைப்படுத்திய தமிழ் தேசிய பேரவை, ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் தமிழரசுக் கட்சி கையொப்பம் இடவில்லை என்பது கட்சி அரசியல் போட்டியாக இருக்கலாம்.
அது கஜேந்திரகுமார் - சுமந்திரன் என்ற இருவருக்கும் உள்ள ஆணவம், தற்பெருமை என்ற தனிப்பட்ட பிரச்சினை என்று கூட சொல்லலாம்.
ஆனால், சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஆணையாளருக்கு எழுதிய தங்கள் கடிதத்தை ஏற்றுக் கொண்டார் என்றும், பிரச்சினை இல்லை என அவர் கூறியதாகவும் கஜேந்திரகுமார் யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் பகிரங்கமாகக் கூறியதன் மெய்ப்பொருள் என்ன?
சுமந்திரன் கடிதத்தை ஏற்றுக் கொண்டார் என்றால், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை கோரிக்கை கடிதத்தில் முதன்மையாக இல்லை என்பதுதானே அதன் அர்த்தம்?
இன அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணைக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து, போர்க்குற்றம் - மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பதற்கு இரண்டாம் அல்லது மூன்றாம் இடத்தில் வைத்துக் கோரி இருந்தால், சுமந்திரன் கடிதத்தை ஏற்றிருப்பாரா?
இன அழிப்பு என்பது...
ஆகவே, கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகிய இருவரும் இலங்கை நாடாளுமன்றத்திலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் நிகழ்த்திய உரைகளின் போது கூறிய ”இன அழிப்பு” என்பது, உயிரோட்டமாகவும் முதன்மையாகவும் கடிதத்தில் இல்லை என நான் முன்வைத்த விமர்சனம் நியாயமானது.
மேலும், சுமந்திரன் 2015 இல் ஓடிக் கொடுத்த அஞ்சல் ஓட்டத்தை 2025 இல் கஜேந்திரகுமார் நிறைவு செய்தார் என்று முன்வைத்த விமர்சனம் தெளிவானது. கடிதத்தில் பெயர்களை பதிவு செய்ய, தங்கள் அனுமதி பெறப்படவில்லை என சில அமைப்புகள் மறுத்திருந்தன.
ஆனால், சமூக அமைப்புகளின் பெயர்களை பயன்படுத்தியமைக்குத் தான் பொறுப்பு அல்ல என்று கஜேந்திரகுமார் செய்தியாளர்கள் முன்னிலையில் மறுத்திருக்கிறார்.
அரசியல் கட்சிகளிடம் மாத்திரமே, தான் கையெழுத்து பெற்றதாகவும், ஏனைய அமைப்புகளின் பெயர்களை பயன்படுத்தும் பொறுப்பு சிவில் சமூகத்துக்குரியது என்றும் கஜேந்திரகுமார் செய்தியாளர்களிடம் கற்பிதம் செய்தார்.
அப்படியானால் ஜெனீவாவுக்கு கடிதம் அனுப்பும் பணி, பொறுப்பு யாருடையது? சிவில் சமூக அமைப்புகள் என்று அழைக்கப்படும் தனிப்பட்ட நபர்களிடம் பொறுப்பை சுமத்தவா தமிழ்த்தேசிய பேரவை உருவானது” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்




