மத ரீதியான கலவரத்தை பாதுகாப்பு துறையே ஏற்படுத்துகிறது: கஜதீபன் பகிரங்கம்
நாட்டில் மத ரீதியான மிக மோசமான கலவரத்தை ஏற்படுத்த பாதுகாப்பு துறையே முயற்சிக்கின்றது என முன்னாள் வடமாாண சபை உறுப்பினர் கஜதீபன் தெரிவித்துள்ளார்.
13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும், இந்தியாவின்
வகிபாகமும் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தனக்கென அரசியலமைப்பை கொண்டிருக்கும் நிலையில் அதன் கீழ் தமிழர்கள் ஒரு தேசிய இனமாகக் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் எமக்கென அரசியலமைப்பில் ஒதுக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றுமாறு இன்னொரு நாட்டு பிரதமருக்கு கடிதம் எழுதும் நிலையும் இன்னொரு நாட்டு அரச தலைவரிடம் உதவி கேட்டுக்கொண்டிருக்கும் நிலையிலும் நாம் உள்ளதாக அண்மையில் கனடா தூதூக் குழுவைச் சந்தித்த விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், 13 ம் திருத்தச்சட்டத்தைக் கொண்டுவர இலங்கையின் அரச தலைவர்களுக்கு விருப்பமின்றிய நிலை காணப்பட்டாலும் அன்றைய காலத்தில் ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் காணபடபட்டது . இதைவிட எமது மூத்த தலைவர்களின் அழுத்தமும் இதற்கு காரணமாக அமைந்தது.
1986ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் பெருமளவானோர் சமஷ்டிக்கே ஆதரவளித்து வருகின்றனர். மாகாண சபை ஆட்சிக்காலம் இருந்த 5 வருடங்களில் எந்தவொரு அரச காணியும் இராணுவத்திற்கு வழங்கியது கிடையாது.
மாகாண சபை
இதேவேளை பல பாடசாலைகளை தேசிய பாடசாலையாக்குவதற்கான முன்மொழிவுகள் வந்த போதும் மாகாணத்தில் சிறந்த பாடசாலைகளை உருவாக்குவதன் நோக்கிலேயே மாகாண சபையை அமைத்தோம் என்பதால் அவற்றை நிராகரித்தோம்.
நிராகரிப்போடு நின்றுவிடாது தேசியப் பாடசாலைக்கு நிகராக மாகாண பாடசாலைகளை உருவாக்குவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டோம்.
நாம் மாகாணசபை ஆட்சியில் தவறிழைத்து விட்டோம் என்பதற்காக தேர்தலை நடத்த மாட்டோம் என மத்திய அரசு கூற முடியாது. குருந்தூர் மலையில் பொங்கலிட்டு வழிபட நீதிமன்றம் அனுமதியளித்திருந்த போதும் நேற்று அதை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸாரே மறுக்கும் நிலை காணப்படுகின்றது.
தமிழ் காங்கிரஸ்
மத ரீதியான மிக மோசமான கலவரத்தை ஏற்படுத்த பாதுகாப்பு துறையே முயற்சிக்கின்றது. இவ்வாறான நிலைமைகள் தான் இன்று காணப்படுகின்றது. பண்டாரநாயக்காவும் தந்தை செல்வாவும் ஒப்பந்தம் செய்யும் போது சிங்கள தேசத்திலுள்ள எதிர்க்கட்சிகள் மட்டும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை மாறாக இங்கு தமிழ் காங்கிரஸும் அதற்கு எதிராக வேலை செய்தது.
டட்லி சேனநாயக்கா - தந்தை செல்வா ஒப்பந்தத்தின் போதும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன மற்றும் பண்டாரநாயக்காவுடன் இங்குள்ளவர்களும் குழப்பமடைந்தனர். 13 ம் திருத்தம் மட்டுமல்ல தமிழ்மக்களுக்குத் தீர்வாக எது வரினும் அதை எதிர்க்கும் மன நிலையில் உள்ளனர். எனவே இவ் வரலாற்றைத் தெரிந்து அதனூடாகப் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
சமஷ்டி தீர்வுக்காக மக்கள் வாக்களிக்கும் நிலையில் அதற்காக நாம் களத்திலே வேலை செய்கின்றோம். தற்போது இராணுவம் மற்றும் அரச தரப்பால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு பாடசாலைகள் அபகரிப்பு, வைத்தியசாலைகளை தமது கட்டுப்பாட்டுக்குட்படுத்தல் போன்றவற்றை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்த தீர்வு நடைமுறையைப் பரீட்சித்து பார்க்க வேண்டும்.
அரச தலைவர்கள் இருக்கும் அனைத்து அதிகாரங்களையும் பிடுங்கிவிடவேண்டும் என்ற சிந்தனையோடு தான் வேலை செய்வார்கள். அரச தலைவரின் நேரடிப் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர் அனைத்ததையும் எதிர்ப்பார்த்த நிலையில் எமது பயணத்தின் இறுதி இலக்கை அடையும் வரை தற்காலிகமாக இவ் முடிவுகளை எடுத்து முன்னேறிச் செல்ல வேண்டும்.
இரு அரசும் செய்துகொண்ட பன்நாட்டு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா அரசிற்கு தார்மீகக் கடப்பாடு காணப்படுகின்றது. என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |