உலக சந்தையில் மசகு எண்ணெய் விநியோகத் தடையைச் சீர்செய்ய ஜி7 நாடுகள் திட்டம்
ஈரான் மீதான போர் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 119 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், சர்வதேச எரிசக்தி முகமை (IEA) அவசரகால எண்ணெய் இருப்புகளை உலக நாடுகளுடன் இணைந்து வெளியிடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
ஜி7 (G7) நாடுகளின் நிதி அமைச்சர்களுக்கிடையில் நடைபெற்ற இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில், ஜப்பானிய நிதி அமைச்சர் சட்சுகி கடயாமா (Satsuki Katayama) இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பு
போரினால் சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான தாக்கங்கள் மற்றும் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
எண்ணெய் விலை உயர்வதால் ஏற்படும் உலகளாவிய பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலையைத் தவிர்க்க, ஒவ்வொரு நாடும் தங்களின் வசமுள்ள அவசரகால மசகு எண்ணெய் சேமிப்பை ஒருங்கிணைந்த முறையில் சந்தைக்கு விநியோகிக்க வேண்டும் என IEA வலியுறுத்தியுள்ளது.

திங்கட்கிழமை சந்தை நிலவரப்படி எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதீத உயர்வு, பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் மசகு எண்ணெய் விநியோகத் தடையைச் சீர்செய்யவும், விலையை ஓரளவு நிலைப்படுத்தவும் ஜி7 நாடுகள் திட்டமிட்டுள்ளன.