நிதிப் பற்றாக்குறை: காசாவில் உணவு விநியோகம் பாதிப்பு
நிதி நெருக்கடி காரணமாக காசா பகுதியில் வழங்கி வரும் உணவு விநியோகத்தைக் வரும் மாதங்களில் குறைக்கவுள்ளதாக சர்வதேச உதவி அமைப்பான 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' தெரிவித்துள்ளது.
மேலும், "காசா மக்களுக்கு நீண்ட காலத்திற்கு உணவளிக்கும் பொறுப்பை ஒரே ஒரு தொண்டு நிறுவனம் மட்டுமே சுமக்க முடியாது" என்றும் அது எச்சரித்துள்ளது.
இஸ்ரேலின் போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து, காசாவில் பசிப் பிணியைப் போக்க இந்த அமைப்பு இதுவரை 50 கோடி டொலருக்கும் (அரை பில்லியன்) அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளது.
உணவுப் பற்றாக்குறை
இஸ்ரேலின் முற்றுகையால் ஏற்பட்ட கடுமையான உணவுப் பற்றாக்குறையைத் தொடர்ந்து, தனது சேவையை விரிவுபடுத்தி நாளொன்றுக்கு 10 இலட்சம் பேருக்கு சூடான உணவை வழங்கி வந்தது.
தற்போது "போர் நிறுத்தத்திற்கு முந்தைய உணவு விநியோக அளவுக்கு" தங்களின் சேவையைக் குறைக்க எடுத்துள்ள இந்த முடிவு, முற்றிலும் நிதிப் பற்றாக்குறையினால் எடுக்கப்பட்டதே தவிர, காசாவில் உள்ள தேவைகள் குறைந்ததால் அல்ல என்று அந்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், இவ்வளவு பெரிய அளவிலான உணவு உற்பத்தியை ஒரு தனிநபர் தொண்டு நிறுவனத்தால் காலவரையறையின்றித் தொடர முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலின் முற்றுகையால் காசாவில் ஏற்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த மனிதாபிமான நெருக்கடி தற்போது சற்று தணிந்திருந்தாலும், பாலஸ்தீன மக்கள் இன்னும் உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளின் பற்றாக்குறையால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.