எரிபொருள் விலை அதிகரிப்பின் பின்னணியில் அரசாங்கத்தின் மோசடி! நாமல் கடும் சீற்றம்
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதால் ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யவும், அதற்குப் பதிலாக மின் உற்பத்திக்காக அதிகளவில் எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாலுமே அரசு எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை நுகேகொடையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் அரசுகள் எரிபொருள் விலையை உயர்த்தும்போது அமைச்சர்களுக்குத் தரகுப் பணம் சென்றதாகக் கூறப்பட்டது. ஆனால், இன்று எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதற்கான முக்கிய காரணம் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையாகும்.
மாகாண சபைத் தேர்தல்
இதனால் ஏற்பட்டுள்ள பெரும் நட்டத்துக்கு மத்தியில், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக நாளொன்றுக்கு பல இலட்சம் லீட்டர் எரிபொருளை மேலதிகமாக எரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்து, அந்த நட்டத்தை இந்த நாட்டு மக்கள் மீதே அரசு சுமத்தியுள்ளது. தற்போதைய அரசு மக்கள் குறித்து எவ்விதத்திலும் சிந்திப்பதில்லை. தனது நிர்வாகத் திறமையின்மை, ஊழல் மற்றும் நட்டங்கள் அனைத்தையும் மக்கள் மீதே சுமத்துகின்றார்கள்.

விலைகளை அதிகரிப்பதற்கு அரசு எதற்கு என்று அன்று மேடைகளில் கேள்வி எழுப்பியவர்களே, இன்று ஆட்சிக்கு வந்து மக்களின் தலை மேல் அனைத்து சுமைகளையும் சுமத்துகின்றார்கள்.
மேடைகளில் நின்றுகொண்டு தீர்ப்பு வழங்கும் நிலைக்கு ஜனாதிபதி சென்றுள்ளார். நீதிமன்றத் தவணை நாளன்று எவராலும் நீதிமன்றத்துக்கு வர முடியும்.
நாடாளுமன்றத்தில் நான் பேசும்போது எனக்கு அருகில் வந்து நிற்கும் 'திசைகாட்டி' (தேசிய மக்கள் சக்தி) கட்சியின் 159 உறுப்பினர்களும், அந்த வழக்கின் போது நீதிமன்றத்துக்கு வந்து அமர்ந்திருக்குமாறு சவால் விடுக்கின்றேன்.
அப்போதுதான் உண்மைக் கதையை அவர்கள் தெரிந்துகொள்ள முடியும். இல்லையெனில் மேடைகளிலேயே தீர்ப்பு வழங்கும் உங்களுடைய ஜனாதிபதியிடமே இதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
மேலும், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி, பிரதேச தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டும்.
மாகாண சபைகளின் அதிகாரங்களும் நிதியும் ஜனாதிபதியின் ஒன்பது அரசியல் பிரதிநிதிகளான ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஊழல் மோசடி நிறைந்த அரசாங்கம்
இந்த அதிகாரங்களை அரசியல் பிரதிநிதிகளிடம் வழங்காமல் மக்கள் பிரதிநிதிகளிடம் வழங்கியிருக்க வேண்டும். ஏனெனில் அவர்களே மக்களுக்குப் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டவர்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர்கூட ஆளுநர் ஒருவர் பதவி விலகியிருந்தார். தேர்தல் நெருங்க நெருங்க ஏனையோரும் பதவி விலகிவிட்டு தத்தமது நாடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். இறுதியில் மக்களுக்குப் பொறுப்புக்கூற யாரும் இருக்க மாட்டார்கள்.

திசைகாட்டி அரசு இன்னும் மூன்றரை ஆண்டுகள் நீடிக்குமா, இல்லையா என்பதைச் சட்டபூர்வமாகத் தேர்தல் ஆணைக்குழுவும் மக்களுமே தீர்மானிக்க வேண்டும்.
அரசு பதவியில் இருக்கும் வரை அவர்களிடம் வேலை வாங்குவதே எமது நோக்கம். அரசின் தவறுகளையும் திறமையின்மையையும் நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டுவதுடன், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம்.
அண்மையில் இலங்கைக்கு வந்த புதிய நிலக்கரி கப்பலும் தரமற்றது என நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசுக்கு வேலை தெரியாது. ஊழலும் மோசடியும்தான் நிறைந்துள்ளது.
அடுத்த நிலக்கரி கப்பலும் தரம் குறைந்ததாக மாறும் பட்சத்தில், இந்தத் தோல்விகளை மறைப்பதற்காக என்னை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என குறிப்பிட்டுள்ளார்.
உடன் வைத்திய உதவியை நாடவும்! அறிகுறிகளுடன் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு எச்சரிக்கை