டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தில் மோசடி: செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் தீவிர விசாரணை
வவுனியா - செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கல் உள்ளிட்ட நிவாரணங்களில் 60 இலட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி இடம்பெற்றுள்ளமை குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திரவினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை தொடர்ந்து மேலதிக விசாரணைகள் செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகின்றன.
சமைத்த உணவு வழங்கலில் மோசடி
குறித்த விசாரணைகளின் போது டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைளில் மோசடி இடம்பெற்றமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து செட்டிகுளம் பிரதேச செயலக கிராம அலுவலர்களின் தலைமை அதிகாரி உட்பட 04 உத்தியோகத்தர்கள் உடனடியாக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இணைப்பு செய்யப்பட்டுள்ளதுடன், 8 இற்கும் மேற்பட்ட கிராம அலுவலர்களிடமும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், குறித்த மோசடியில் ஈடுபட்ட சில கிராம அலுவலர்கள் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டு மோசடி செய்த பணத்தை மீள செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான மோசடிகள் அனர்த்த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியில் இடம்பெற்றுள்ளமை தொடர்பில்,வெளிப்படையான நீதியான விசாரணைகள் இடம்பெற்று மோசடி செய்த உத்தியோகத்தர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.