சிஐடியிலிருந்து வரும் மின்னஞ்சல் - இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஷானி அபேசேகராவிடமிருந்து அனுப்பப்படுவதாக கூறி வரும் மோசடி மின்னஞ்சல் தொடர்பில் இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மின்னஞ்சல் அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வமானது அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவலின் படி, noucinatacha20@gmail.com மற்றும் police.cid.lk@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து இவ்வாறான மோசடி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி மின்னஞ்சலின் நோக்கம்
இவ்வாறான மின்னஞ்சல்கள் பெறுநர்களை தவறாக வழிநடத்துதல், நிதி மோசடி செய்தல் அல்லது சட்டவிரோதமாக தனிப்பட்ட தகவல்களைப் பெறுதல் போன்ற நோக்கத்துடன் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மோசடியுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறிப்பிடப்பட்ட முகவரிகளிலிருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கும் போது தனிப்பட்ட அல்லது இரகசியத் தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.