எங்களுடைய நிலம் கிடைக்கும் வரையில் நாம் போராடுவோம் - அருட்தந்தை லூக் ஜோன் கண்டனம்
எமக்கான நிலம் கிடைக்கப் பெறும் வரையில் நாம் தொடர்ந்து போராடுவோம். நாம் மகாவலிக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. உங்களுக்கு இவ்வளவுதான் தருவோம் என்று எங்களை ஏமாற்ற முடியாது என சிவில் சமூக செயற்பாட்டாளரான அருட்தந்தை லூக் ஜோன் தெரிவித்துள்ளார்.
இன்று(15.06.2026) நடைபெற்ற மயிலத்தமடு, மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நூல் வெளியீடு
எழுநாவினால் எழுத்தாளர் வை.ஜெயமுருகன் எழுதிய மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் தரை நில அடையாளம், இன அடையாளம், வாழ்வாதாரம் என்னும் தலைப்பில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நூல் வெளியீட்டை செய்வதற்கு உறுதுணையாக இருந்த சார்ள்ஸ் அன்ரனியினால் நூல் வெளியீடு செய்துவைக்கப்பட்டது. இதன்போது பல்வேறு உரைகளும் இடம்பெற்றன.

மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது நில உரிமையினை பாதுகாப்பதற்காக முன்னெடுத்துவரும் அறவழி போராட்டத்தின் 1000 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் தமது கோரிக்கையினை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக 1570 ஏக்கர் காணிகளை வழங்குமாறு அறிவுறுத்தியிருந்த நிலையில், அதனை உரிய திணைக்களங்கள் இதுவரையில் நிறைவேற்றவில்லையெனவும் அவற்றினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மட்டக்களப்புக்கான விஜயம்
இதன்போது, கருத்து தெரிவித்த அருட்தந்தை லூக் ஜோன்,
கடந்த மாதம் 12 ஆம் திகதி அவர்களை அழைத்து உரையாடினார்கள். காரணம் என்னவென்றால், அதனைத் தொடர்ந்து வந்த வாரங்களிலே ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ள இருந்தார். எனவே, அரசுக்குத் தெரியும் இங்கே ஜனாதிபதி வருகின்ற பொழுது நிச்சயமாக இவர்கள் போராட்டம் செய்வார்கள்.
எனவே, ஒரு 1,570 ஏக்கரை கொடுத்துவிட்டால் அன்று போராட்டம் நடைபெறாது, ஜனாதிபதியினுடைய வருகை சுமுகமாக இருக்கும் என்று எண்ணி இவர்களோடு பேசினார்கள்.

எங்களுடைய பண்ணையாளர்களும் ஒரு வகையில் அதை நம்பினார்கள். எனவேதான், ஜனாதிபதியை வரவேற்கிறோம் என்று சொல்லி ஒரு பதாகையைக் கட்டினார்கள். ஆனால், ஜனாதிபதி ஹெலிகாப்டர் (உலங்கு வானூர்தி) மூலமாக வந்து போய்விட்டார்.
நாங்கள் போராட்டமும் செய்யவில்லை, தருவதாக சொல்லப்பட்ட நிலமும் தரவில்லை. அத்துடன், மாவட்டத் தலைவர்கள் ரீதியில் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று சொன்னபொழுது, அவர்கள் சொன்னார்கள் "நாங்கள் உங்களுக்கான 1,570 ஏக்கரை வர்த்தமானியின் ஊடாக அறிவிப்போம்".
அதனை கேட்டு நாங்கள் அமைதியாகக் காத்திருந்தோம். அதுவும் திட்டமிட்ட வகையிலேயே ஏமாற்றப்பட்டது. எனவே, ஏற்கனவே உரையாளர்கள் சொன்னது போல, இந்த மயிலாத்தமடு - பெரியமாதவனைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து நாங்கள் தொடர்ச்சியாக ஏதோ ஒரு வகையிலே ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருகிறோம்.
ஆனால், அரசும் அரசோடு இணைந்த சில சக்திகளும் தாம் இதில் வெற்றி கண்டுவிட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால், நிச்சயமாக இல்லை. எமக்கான நிலம் கிடைக்கும் வரையில் இந்தப் போராட்டம் தொடர வேண்டும், தொடரப்பட வேண்டும். இதற்கு இந்த மாவட்டத்தினுடைய மதக் குருக்களாக, சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களாக நாங்கள் எப்பொழுதும் உடன் இருப்போம்.
பண்ணையாளர்களின் பிரச்சினை
ஏன் நாங்கள் இந்தப் போராட்டங்களிலே பங்குபெற வேண்டும்? நான் ஒரு பண்ணையாளரா? இல்லையே. எனக்கு மாடுகள் இருக்கிறதா? இல்லையே. அல்லது எனக்கு நூற்றுக்கணக்கான மாடுகள், கால்நடைகள் இல்லையே.
ஏன் நானும் இதிலே பங்குபெற வேண்டும் என்றால், இது வெறுமனே மயிலாத்தமடு - பெரியமாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை மாத்திரமல்ல. இது ஒரு மாவட்டத்தின் பிரச்சினை.
யுத்தத்திற்குப் பின்னர் வடக்கு-கிழக்கிலே நிலத்தைப் பாதுகாக்கின்ற பணியிலே மனிதர்கள் மாத்திரமல்ல, விலங்குகளும் பங்களிப்புச் செய்கின்றன.

ஜனாதிபதி சொன்னது போலவே எம்மில் பலரும் சொல்லலாம் "நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலே பால் உற்பத்தியை அதிகரிப்போம்" என்று, நாங்களும் அதைத்தான் சொல்கிறோம், அதிகரியுங்கள். அதற்கு ஜெர்சி மாடு தீர்வல்ல. மாவட்டத்தினுடைய பால் உற்பத்தியை அதிகரிக்க நீங்கள் ஜெர்சி மாட்டைக் கொண்டு வந்தால், மாவட்டத்தினுடைய இறைச்சி உற்பத்திக்கு என்ன செய்வீர்கள்?
இந்த மாவட்டத்திலே தமிழர்கள் உட்பட ஏனைய எமது சகோதர இனத்தவர்கள் கூட மாட்டிறைச்சி உண்ணுகிறார்கள், தன்னிறைவாக அதனைப் பெற்றுக் கொள்வதற்கு அந்த மாடு இங்கேதான் உற்பத்தியாகி வளருகிறது. அது நாட்டு மாடால் மாத்திரம்தான் சாத்தியம்.
பால் உற்பத்தி
ஜெர்சி மாடு பசுங்கன்று போட்டால் மாத்திரம்தான் உங்களுக்குப் பால். அந்த மாடுகளைக் கொண்டு நீங்கள் உழவ முடியாது. ஓர் இனத்தை அழிப்பது என்பது, மனிதர்களை மாத்திரமல்ல, அவர்களுடைய வாழ்வாதாரம், வரலாற்று அடையாளங்கள் என எல்லாம் அழிக்கப்படுகிற பொழுது தான் சாத்தியமாகும்.
ஜெர்சி மாட்டைக் கொண்டு நீங்கள் மாட்டு வண்டிச் சவாரி நடத்துவீங்களா? ஆகவே, எங்கள் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் இந்த மாட்டில் தங்கியிருக்கிறது. எனவே, நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு அதிகமாக பால் எடுக்கிற மாட்டைத் தருவோம் என்று சொல்லி, எங்களுடைய நாளாந்த வாழ்வாதாரத்தை, தமிழினத்தினுடைய அடையாளத்தை, இருப்பை அழிப்பதுதான் இந்த அரசினுடைய நோக்கம் என்பதிலே நாங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
இறுதியாக, நாங்கள் மகாவலி குறித்துப் பேசினோம். இலங்கை நீர்ப்பாசனத்திலும், மின்சார உற்பத்தியிலும், தன்னிறைவு உணவு உற்பத்தியிலும் மகாவலி பெரிய பங்கு வகிக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால், வரலாற்றை நீங்கள் எடுத்துப் பார்த்தீர்களானால் வடக்கு-கிழக்கிலே எங்கெல்லாம் மகாவலி ஓடியதோ அங்கெல்லாம் தமிழ் மக்களுடைய இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டு, விகிதாசாரம் குறைக்கப்பட்டு, சிங்களக்குடியேற்றங்கள் அமைக்கப்பெற்றது தான் வரலாறு.
மகாவலி திட்டம்
இந்த மகாவலி திட்டங்களினால் தமிழ் மக்களுடைய வரலாறும், அவருடைய நாளாந்த வாழ்வும் பாதுகாக்கப்பட்டதாக இந்த இலங்கையிலே வரலாறு இல்லை.
எனவே, கடந்த காலத்திலே நாங்கள் பல அனுபவங்களைப் பெற்றிருக்கிறோம். எனவே, மறுபடியும் இந்த மகாவலி 'பி' வலயம், இது வெளியிலிருந்தால் என்ன?, மட்டக்களப்பிலிருந்தால் என்ன?
என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், மகாவலியோடு பேசுவதற்கு மகாவலி யார்? அவர்கள் இந்த நாட்டினுடைய அரசியலமைப்பை பார்க்கிலும் பெரியவர்களா? இந்த மகாவலியைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரக் கட்டமைப்பு இந்த நாட்டிலே இல்லை என்றால், ஏன் இந்த அரசு என்ற கேள்வி எமக்குள் எழுகிறது.

எனவே, இந்த மயிலாத்தமடு - பெரியமாதவனை இன்று 1,003 நாட்களைக் கடந்திருக்கிறது. ஏற்கனவே பலர் சொன்னது போல, எமக்கான நிலம் கிடைக்கப் பெறும் வரையில் நாம் தொடர்ந்து போராடுவோம்.
மகாவலி எம்மைப் பயன்படுத்த முடியாது, நாம் மகாவலிக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. வடக்கு-கிழக்கிலே எமக்கான நில உரிமை இருக்கிறது.
இந்த மண்ணினுடைய மைந்தர்கள் நாங்கள். எங்கிருந்தோ வந்தவர்கள், உங்களுக்கு நாங்கள் இவ்வளவுதான் தருவோம் என்று சொல்லி எங்களுடைய பண்ணையாளர்களை ஏமாற்ற முடியாது. எங்களுடைய நிலம் எங்களுக்கு வேண்டும்.

அந்த நிலம் கிடைக்கும் வரையில், நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். பண்ணையாளர்களின் விடுதலைக்காக நாங்கள் தொடர்ந்தும் முயற்சிப்போம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சங்க தலைவர் நிமலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் குருநாதன்,அருட்தந்தை லுக்,சட்டத்தரணி ஜெயசிங்கம்,சிவில்சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன்,மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் சங்க தலைவி மற்றும் அ.அமலநாயகி,எழுநா அமைப்பின் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சார்ள்ஸ் அன்டனி உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.