மூன்று வெவ்வேறு குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது!(Photos)
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேசிய பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள சுண்டிகுளம் பகுதியில் இரு வேறு குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிபடையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சுண்டிகுளம் பகுதி நேற்று(15.08.2023) சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கைகள்
இதன்போது, சட்டவிரோதமான முறையில் காடழிப்பில் ஈடுபட்ட ஜே.சி.பி இயந்திரம் ஒன்றின் சாரதியும்,அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவியந்திரங்களும் அதன் சாரதிகளுமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நான்கு பேரையும் இன்று(16.08.2023) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த வயோதிபர் கைது
திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கன்தளாய் பிராந்தியத்துக்கு பொறுப்பான குற்றத் தடுப்பு பிரிவினரும் மொரவெவ பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபரின் வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 25,000 மில்லி லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ -சுவர்ணஜயந்திபுர பகுதியைச் சேர்ந்தவர் (65வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேகம் நபரின் வீட்டை சோதனையிட்டதாகவும் இந்நிலையில் வீட்டு வளாகத்தில் மறைத்து வைப்பதற்காக கிடங்கு தோண்டப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
செய்தி-பதூர்தின் சியானா






