முன்னாள் ஜனாதிபதியின் டொலர் மோசடி தொடர்பான கோப்பு:தகவல்கள் அம்பலம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) ஊழல்கள் சம்பந்தமாக தன்னிடம் ஏழு கோப்புகள் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) செய்தியாளர் சந்திப்பை நடத்தி தெரிவித்திருந்தார்.
இந்த ஏழு கோப்புகளில் ஒரு கோப்பில் முன்னாள் ஜனாதிபதியின் டொலர் மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது தேர்தலுக்காக ஒரு பலமிக்க வெளிநாடு ஒன்றிடம் இருந்து 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன.
இந்த நிதி முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேனவின்(Daham Sirisena) மாமனாருக்கு சொந்தமான ஹெல்காடோ நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
அப்போது ஆட்சியில் இருந்தது மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் என்பதால், இது குறித்து குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு முறைப்பாடும் கிடைத்துள்ளது.
கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய தேர்தல் நேரத்தில் அந்த பணத்தை குற்றவியல் விசாரணை திணைக்களம் தனது பொறுப்பில் எடுத்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைத்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பின்னர், மைத்திரிபால சிறிசேன இந்த பணத்தை விடுவித்துக்கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொண்டதாக தெரியவருகிறது.
இதற்காக முன்னாள் ஜனாதிபதி இந்திரஜித் குமாரசுவாமியை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு நியமிக்க முயற்சித்துள்ளதுடன் அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதனை தடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கவின் தேவைக்கு அமைய அர்ஜூன் மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு நியமித்தனர்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அர்ஜூன் மகேந்திரனை தனது வீட்டுக்கு அழைத்து, மத்தியில் வங்கியில் இருந்து அந்த பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரிடம் மீண்டும் கையளிக்குமாறு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதியின் இந்த உத்தரவு குறித்து மகேந்திரன், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அந்த வெளிநாட்டுப் பணம் நீதிமன்றத்தின் பொறுப்பில் இருக்கும் சொத்து என்பதால், அது தொடர்பில் சட்டரீதியாக செயற்படுமாறு ரணில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து ஏற்பட்ட சம்பவங்கள் காரணமாக அர்ஜூன் மகேந்திரன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து நீக்கிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி, இந்திரஜித் குமாரசுவாமியை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தார்.
குமாரசுவாமி ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர், அந்த பணத்தை முன்னாள் ஜனாதிபதி விடுவித்துக்கொண்டதாக தகவல்கள் கூறுவதாக சிங்கள இணையத்தின் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.