வவுனியாவில் முன்னாள் அரசியல் கைதி கொழும்பு பயங்கரவாத விசாரணைக்கு அழைப்பு
வவுனியாவில் முன்னாள் அரசியல் கைதி ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (ரிஐடி) அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கான கடிதம் குறித்த அரசியல் கைதியின் வீட்டிற்குச் சென்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் இன்று (29.11) வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) அவர்களை எதிர்வரும் முதலாம் திகதி காலை 9.30 இற்கு கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வாக்கு மூலம் பெற வருமாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக விசாரணையை மேற்கொள்வதற்கு 2021 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 01 ஆம் திகதி காலை 9.30 மணிக்குப் பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவு கெப்பிட்டல் கட்டிடம் நாரன்பிட்ட முகவரியில் 3ஆம் மாடிக்கு சமூகமாக்குமாறு அழைக்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

