தங்காலையில் கைத்துப்பாக்கியுடன் முன்னாள் கடற்படைச் சிப்பாய் கைது
அம்பாந்தோட்டை, தங்காலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை உடமையில் வைத்திருந்த முன்னாள் கடற்படைச் சிப்பாய் ஒருவரைப் பொலிஸார் நேற்று(15.04.2026) கைது செய்துள்ளனர்.
தங்காலைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நபர் ஒருவர் நடமாடுகின்றார் என்று பொலிஸ் விசேட பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே அவர் சிக்கியுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
இதன்போது அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் முன்னாள் கடற்படைச் சிப்பாய் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் எதற்காக இந்த ஆயுதத்தை வைத்திருந்தார்? ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தாரா? அல்லது பாதாள உலகக் குழுக்களுடன் இவருக்குத் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தாண்டு காலத்தில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான சட்டவிரோத ஆயுதப் புழக்கத்தைக் கண்டறிய பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.