முன்னாள் அமைச்சர் திலும் அமுனுமகவுக்கு சிக்கல்! கைது செய்யுமாறு முறைப்பாடு
முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகமவை கைது செய்யுமாறு சிறுவர்கள் துஷ்பிரயோகத்தை ஒழிப்பதற்கான அமைப்பு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளது.
அனுராதபுரத்தின் எட்டு விகாரைகளின் (அடமஸ்தானய) விகாராதிபதியுடன் தொடர்புடைய பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை ஒரு பாலியல் தொழிலாளி என்று சர்வஜன பலய கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகம குறிப்பிட்டிருந்தார்.
குறித்த கருத்தை வன்மையாகக் கண்டித்துள்ள சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிப்பதற்கான அமைப்பு, திலும் அமுனுகமவைக் கைது செய்யக் கோரி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளது.அத்துடன் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் முறைப்பாடு அளித்துள்ளது.
உடனடி நடவடிக்கை
பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி இது ஒரு குற்றச் செயல் என்றும், எனவே சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும், பொலிஸ் பணியகமும் சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைப்பின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் துஷாரா விக்ரமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிடடுள்ள அவர், நாங்கள் அந்தச் சிறுமிக்காகவே குரல் கொடுக்கிறோம். குற்றமொன்றை யார் செய்தாலும் அது குற்றம் தான்.
அதிர்ச்சியில் உறைந்து போன, இதயத்தில் கருணை கொண்ட ஒரு சமூகத்தின் கடமை, பாதிக்கப்பட்ட சிறுமிக்காகக் குரல் கொடுப்பதாகும்.
விசேட சலுகை
ஆனால் இந்த நாடகத்தனமாக செயற்பாடுகளாலும் சட்ட நடைமுறையாக்கத்தின் பலவீனத்தாலும், சந்தேக நபரான அட்டமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்குச் விசேட சலுகை வழங்கப்படுவதாக தெரிகிறது.
நாங்கள் அட்டமஸ்தான விகாராதிபதியை மதிக்கிறோம். அந்தப் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஹேமரத்ன என்ற நபரை நாங்கள் கேள்விக்குள்ளாக்குகிறோம். இங்கே எங்களுக்கு மதத்துடனோ அல்லது சங்க சாசனத்துடனோ எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஒரு சந்தேக நபருக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அலட்சியமாக இருக்கும் அமைப்புகளிடம்தான் பிரச்சினை உள்ளது.
எனவே சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் பொலிஸாரும் சுற்றி வளைக்காமல் விரைவாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.