நீண்ட நாட்களின் பின் முன்னாள் புலனாய்வு அதிகாரிக்கு பிணை
குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஷானி அபேசேகர மற்றும் துணை பொலிஸ் அத்தியட்சகர் சுகாத் மெண்டிஸ் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.
ஏற்கனவே கம்பஹா மேல் நீதிமன்றம் இவர்கள் இருவருக்குமான பிணைக் கோரிக்கையை நிராகரித்திருந்தது.
இதனையடுத்தே மேன்முறையீட்டு மன்றின் தலையீடு கோரப்பட்டது.
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்டவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தார்கள் என போலிச் சாட்சியங்ளை சமர்ப்பித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டிருந்தார்.
ஷானி அபேசேகர சார்பில் சட்டத்தரணி கௌரி தவராசா மன்றில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, காணாமல் போகச் செய்யப்பட்டதாக கூறப்படும் கேலிச்சித்திர செய்தியாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் விசாரணைகளையும் ஷானி அபேசேகரவே மேற்கொண்டு வந்தார்.
இதேவேளை 11 பேர் கடத்தல் வழக்கை சுவிஸில் தஞ்சமடைந்துள்ள நிசாந்த டி சில்வாவுடன் இணைந்து இவர் முன்னெடுத்திருந்தார் என்பதுடன் உலகின் தலைசிறந்த புலனாய்வு அதிகாரி என சர்வதேச விருதினை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.