மக்களின் காணிகளை விடுவிக்க வனவள திணைக்களம் மறுப்பதை ஏற்க முடியாது..! வடக்கு ஆளுநர்
மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லையென்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று(25.02.2026) கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காணியை விடுவிக்குமாறு கோரிக்கை
இதன்போது உரையாற்றிய அமைச்சர் இ.சந்திரசேகர், நடப்பு ஆண்டில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காகப் பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ள நிலையில், அவற்றை வினைத்திறனுடன் செலவிடுவதற்கான போதிய கால அவகாசம் காணப்படுவதால், அபிவிருத்திப் பணிகளை மிகச் சிறப்பாகவும் துரிதமாகவும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

குறித்த கூட்டத்தில் முக்கிய விடயங்களுக்குக் குழுவினால் அனுமதி வழங்கி வைக்கப்பட்டது.
வனவளத் திணைக்களத்திடமிருந்து 10,821 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், வெறுமனே 1,088 ஏக்கர் காணியை மாத்திரமே விடுவிக்க வனவளத் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பில் சுட்டிக்காட்டிய மாவட்டச் செயலாளர், கோரப்பட்ட முழுமையான 10,821 ஏக்கர் காணியையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், அக்கோரிக்கைக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக அனுமதி வழங்கியது.
அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்காலக் குடிநீர்த் தேவையைக் கருத்தில்கொண்டு, இரணைமடுக் குளத்திலிருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியும் ஒருங்கிணைப்புக் குழுவால் வழங்கப்பட்டது. அத்துடன், கிளிநொச்சி நகர்ப்புறக் குளங்களின் ஒதுக்கீட்டுக் காணிகளை ஆக்கிரமித்துள்ளவர்களைச் சட்டபூர்வமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.




திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam