கொழும்பில் கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டவர்கள் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
கொழும்பு, இராஜகிரிய பகுதியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 120 வெளிநாட்டு சந்தேக நபர்கள், இலங்கையிலிருந்து கலிபோர்னியா மற்றும் சவூதி அரேபியாவின் வங்கி கணக்குகளை ஊடுருவியமை தெரியவந்துள்ளது.
இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் கொழும்பு மேலதிக நீதவான் நுவான் கௌஷல்ய முன்னிலையில் வெலிக்கடை பொலிஸார் நேற்று இந்த விபரங்களை சமர்ப்பித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 3 கணினிகளை, இலங்கை கணினி அவசர தயார்நிலை பிரிவிற்கு அனுப்பி நடத்திய முதற்கட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது.
இணைய மோசடி
மேலும் கைப்பற்றப்பட்ட 151 கணினிகள், 51 மடிக்கணினிகள் மற்றும் 266 கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்கள் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை இன்னும் நிறைவடையாததால் சந்தேக நபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனை பரிசீலித்த மேலதிக நீதவான், கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் விசா இன்றி தங்கியிருந்த 28 சந்தேக நபர்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிப்பதற்காக, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அல்லது அவரது பிரதிநிதி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பிடியாணை பிறப்பித்துள்ளார்.
வழக்கு விசாரணை
இராஜகிரிய, மத்திய வெலிக்கட வீதியில் அமைந்துள்ள ஏழு மாடி அடுக்குமாடி குடியிருப்பு வளாகமொன்றில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த இணையவழி நிதி மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2ஆம் திகதி சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் கணினிகள் உள்ளிட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இந்த 120 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்த வெளிநாட்டு சந்தேக நபர்கள் Zoom தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.