மகிந்த மற்றும் பசிலுக்கு வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு!
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கான வெளிநாட்டு பயணத்தடை எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிய மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே உயர்நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதேவேளை, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற போவதில்லை என தமது சட்டத்தரணிகள் ஊடாக உறுதியளித்தனர்.
இந்தநிலையில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் புவனேக அலுவிஹாரே, நீதியரசர் விஜித் மலல்கொட, நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஆகியோர், ஆதரவு மனுக்களை கோரும் வகையில் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தனர்.
இலங்கையின் முன்னாள் நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் மற்றும் ஜெஹான் கனகரெட்ன ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மனுவில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
இந்த மனுவில், நிதி முறைகேடுகள் மற்றும் இலங்கை பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்திற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த பிரதிவாதிகளில் சிலர் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்றும், அதன் மூலம் மனுதாரர்கள் கோரும் தகவல்களை வழங்குவது தடைப்பட்டு, முறையான விசாரணைக்கு தடை ஏற்படுத்தப்படலாம் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள இடைக்கால நிவாரணம் நீதிமன்றத்தால் வழங்கப்படாவிட்டால், தங்களுக்கும் இலங்கையின் குடிமக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு, பாதிப்பு மற்றும் பாரபட்சம் ஏற்படும் என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர மற்றும் உபுல் ஜயசூரிய ஆகியோர் முன்னிலையாகினர்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, நவீன் மாரப்பன .ஆகியோர் முன்னிலையாகினர்.
மேலதிக செய்தி-சிவா மயூரி