நண்பர்களுடன் கடலுக்கு சென்ற வெளிநாட்டவருக்கு நேர்ந்த விபரீதம்
வெலிகம கடற்பகுதியில் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது வலுவான அலை மற்றும் நீரோட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணியொருவர் அடித்து செல்லப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று(09.08.2026) வெலிகம பழைய கடை கடற்கரையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த வெளிநாட்டவர், 21 வயதுடைய டுனிசிய நாட்டை சேர்ந்தவர் என்றும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞர் நேற்று(08) சனிக்கிழமை பிற்பகல் தனது டுனிசிய நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து வெலிகம பழைய கடை கடற்கரைப் பகுதியில் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
சீரற்ற காலநிலையால் சேர்ந்த விபரீதம்
நாட்டில் நிலவும் பலத்த காற்று மற்றும் சீற்றமான கடல் நிலைமை காரணமாக உருவான பலத்த நீரோட்டத்தில் சிக்கி அவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனார்.

பொலிஸ் கடலோரப் பாதுகாப்புப் பிரிவினர், கடலோரக் காவல்படையினர் மற்றும் தனியார் டைவிங் குழுவினர் இணைந்து அவரைத் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட போதிலும் நேற்றைய தினம் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், இன்று(09) காலை அவரது சடலம் கரை ஒதுங்கிய நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக வெலிகம தலைமைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.