கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பு - வெளிநாட்டு நாணயங்களுடன் சிக்கிய உண்டியல் முகவர்
புறக்கோட்டையில் பணமாற்று முகவர் நிறுவனமொன்றை நடத்தி வந்த நபரிடம் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கியின் விதிமுறைகளை மீறி அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தி செல்லப்பட்ட முகவர் நிறுவனம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்ட போது இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சுற்றிவளைப்பு
புறக்கோட்டை பிரதேசத்தில் உண்டியல் முறை மூலம் பணத்தை மாற்றும் நபர்களை கண்டுபிடிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய, கைது செய்யப்பட்ட நபரிடம் 2400 அமெரிக்க டொலர்கள், 900 அவுஸ்திரேலிய டொலர்கள், 1000 ஸ்டெர்லிங் பவுண்ட்கள், 40,000 ஜப்பானிய யென் மற்றும் 200 யூரோக்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றின் இலங்கை பெறுமதி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.
குறித்த நபரிடம் மத்திய வங்கியின் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.