புதிய அரசாங்கத்துடன் ஒருபோதும் இணைய மாட்டோம்: சஜித் திட்டவட்டம்
காலிமுகத்திடலில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அராஜகம் புரிந்தவர்களுடன் ஒன்றாக அமருவதற்கு நாங்கள் தயாரில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஆட்சியமைக்க நாங்கள் வருவோம் என்று அவர்கள் நம்பிக்கை வைப்பது முட்டாள்தனமானது.
புதிய ஜனாதிபதியின் அழைப்பு
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனம் குறித்து பல விமர்சனங்கள் உள்ளன.
எனினும், அரசமைப்பின் பிரகாரம் அவர் நியமிக்கப்பட்டதால், அவருக்குரிய மதிப்பை வழங்குகின்றோம்.
பதவியேற்ற ஜனாதிபதியை சந்தித்து நாம் கலந்துரையாடினோம். நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் இணைந்து செயற்பட எம்மை அழைத்தார்.
நாட்டின் 220 இலட்சம் மக்களுக்கு நன்மைகளை ஆற்ற நாம் ஒன்றிணைய வேண்டும் என்றார். கடந்த கால சம்பவங்களை புறந்தள்ளி அவருடன் இணைந்து செயற்பட நாம் தயாராக இருந்தோம்.
மக்களுக்கெதிராக கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை
கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு மோசமான தீர்மானம் எடுக்கப்பட்டது. வன்முறை தலைதூக்கியது. அரச பயங்கரவாதம் கட்டவிழுத்து விடப்பட்டது.
மறுநாள் வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்திருந்த போதும் ரணில் விக்ரமசிங்க மோசமான ஒரு ஆலோசனையை கேட்டு வன்முறைக்கு ஆணையிடுவார் என நான் நினைக்கவில்லை.
இதன்பின்னரும் ஆட்சியமைக்க நாம் வருவோம் என்று நம்பிக்கை வைப்பது முட்டாள்தனமானது.
நாம் தேசத்துரோகிகள் அல்ல
மக்கள் ஆணைக்கு எதிரான, காட்டிக்கொடுக்கும் தீர்மானத்தை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தியோ, கூட்டணியோ தயாராக இல்லை.
நாம் எவருக்கும் முட்டுக்கொடுக்கமாட்டோம். இந்த அசிங்கமான அரசியல் கொள்கைக்கு கைதூக்க நாம் தயாரில்லை.
இத்தகையவர்களுடன் ஒன்றாக அமரும் அளவுக்கு நாம் தேசத்துரோகிகள் அல்ல.
எனினும், நாட்டுக்காக எம்மால் முடிந்தவரை, எல்லையற்ற உதவிகளை வழங்க தயாராகவுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை வாக்குகளால் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டது |