நாவற்குழி உணவுக் களஞ்சியசாலையை பல்பொருள் விற்பனை நிலையமாக புனரமைக்க அறிவுறுத்தல் (Photos)
நாவற்குழி உணவுக் களஞ்சியசாலையை "ரஜவாச" பல்பொருள் விற்பனை நிலையமாக மாற்றுவதற்கான புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு களஞ்சியசாலை ஆணையாளருக்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன யாழ். மாவட்டத்துக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை நேற்று மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, நாவற்குழி உணவு களஞ்சியசாலையை, உடனடியாக புனரமைத்து குடாநாட்டுக்கான அத்தியாவசிய பொருட்களை சேமித்து விநியோகம் செய்யும் களஞ்சியமாக மாற்றுமாறு, களஞ்சியசாலை ஆணையாளருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நெருக்கடி நிலைகளுக்கு பின்னதாக இக்களஞ்சியத்தை, "ஒரே கூரையின் கீழ் அனைத்து அரச அங்காடிகளும்" என்ற அடிப்படையில் நாடு முழுவதும் அமையவுள்ள "ரஜவாச" பல்பொருள் விற்பனை நிலையமாக மாற்றுமாறு, அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக் கொண்டு அதற்குரிய பணிகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


