மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் 86 மாணவர்கள் அனுமதி! அதிகரிக்கும் எண்ணிக்கை
புதிய இணைப்பு
மட்டக்களப்பு நகரில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மூன்று பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போதுவரை 86 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பிலுள்ள புனிதமைக்கல் கனிஷ்ட பாடசாலையை சேர்ந்த மாணவர்களும், கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த , கல்லடி வினாயகர் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு நகரில் மூன்று பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையினால் 44 மாணவர்கள்வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மூன்று வெவ்வேறு பாடசாலைகளில் இடைவேளையின்போது குறித்த பாடசாலைகளில் அமைந்துள்ள சிற்றுண்டி சாலைகளில் உணவு வாங்கி மாணவர்கள் உட்கொண்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
அவ்வாறு மாணவர்கள் வாக்கி உட்கொண்ட உணவு ஒவ்வாமையினால் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வுணவை உட்கொண்ட மாணவர்களுக்கு, வாந்தி, தலைசுற்று, ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தினர் துரிதமான நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக நோய்காவு வண்டிகளில் துரிதமாக மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவை தொற்றா நோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ்.உதயகுமார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதுதொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பாடசாலைகளில் இயங்கிவரும் சிற்றுண்டிச் சாலைகளுக்கு ஒரு இடத்திலிருந்தே உணவுகள் விநியோகித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணவர்கள் குறித்த பாடசாலைகளில் பிட்டு வாங்கி உண்டதாகவும் அந்த உணவு ஒவ்வாமை நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.




