மட்டக்களப்பு நகர்ப்பகுதிகளில் முகக்கவசம் அணியாது சென்ற ஐவருக்கு கோவிட் தொற்று உறுதி
மட்டக்களப்பு நகர்ப்பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து வீதிகளில் முகக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பயணித்தவர்களை வழிமறித்து திடீர் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டதில் வங்கி ஊழியர்கள், பொலிஸார் உட்பட 5 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் 3 வது அலையாக அதிகரித்துள்ள கோவிட் தொற்றினையடுத்து அதனைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத்துறையினர் இன்று நகர்ப்பகுதியான அரசடி வீதி சுற்று வட்டத்திற்கு அருகில் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், பொலிஸாருக்கும் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளத்திட்டமிட்டு பரிசோதனைகள் இடம்பெற்றது.
இந்த நிலையில் அந்த பகுதி பிரதான வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் பஸ் வண்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் பொலிஸார், பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் நிறுத்தி முகக்கவசம் அணியாது பயணித்த 177 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த பரிசோதனையில் 3 வங்கி ஊழியர்களுக்கும், வங்கி ஊழியர் ஒருவரின் உறவினருக்கும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் ஒருவர் உட்பட 5 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.