மொரவெவ பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 5 பேர் கைது
திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த 5 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (18)அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா, மஹதிவுல்வெவ, கலன்பிந்துனுவெவ பகுதிகளைச் சேர்ந்த 28, 30,38, 40 வயது உடையவர்கள் ஆவர்.
சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டு வந்த டிப்பர் வாகனம் மற்றும் அனுமதிப்பத்திரம் இல்லாமல் கூடிய மரங்களை வெட்டி உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்றமை என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி ஜீ. வசந்த சந்ரலாலின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதீப் குமார ,ஹேரத் ஆகியோர்களுடன் வசந்த (28739), திசாநாயக்க (2646), ஜெயசிங்ஹ (59621), சஞ்ஜீவ (39036) ஆகியோர்கள் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களைத் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.