மட்டக்களப்பில் வெவ்வேறு சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடைய ஐவர் கைது (Video)
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையிலிருந்து வவுணதீவு பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் கசிப்பு கடத்திய 4 பேருடன், சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நபரொருவர் உட்பட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று முன் தினம் (09.10.2022) நடந்துள்ளது.
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் வவுணதீவு, புளியடிமடு மற்றும் காஞ்சரம் குடா சந்தியில் இருகுழுக்களாக பொலிஸார் வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
80 ஆயிரம் லீட்டர் கசிப்பு கடந்தல்
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் இருந்து வவுணதீவு பிரதேசத்திற்கு விற்பதற்காக இரு வெவ்வேறு பகுதிகளில் இரு மோட்டர்சைக்கிளில் 80 ஆயிரம் லீட்டர் கசிப்பை 4 பேர் கடத்திச் சென்றுள்ள போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் கொக்கட்டிச்சோலை, பனையறுப்பான், முனையக்காடு, சில்லுக்கொடிச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்த 38, 22, 28, 18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மண் அகழ்வு
இதேவேளை பாவற்கொடிச்சேனை சிவன்கோவில் வீதியிலுள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாக பக்கோ இயந்திரம் கொண்டு மணல் அகழ்வில் ஈடுபட்ட நபரொருவரையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



