எரிபொருள் இன்மையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள கடற்றொழிலாளர்கள்(Photos)
கிளிநொச்சியில் கடற்றொழில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் எரிபொருள் இன்மையால் தாம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி - பூநகரி, பளை, கண்டாவளையைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தங்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமையினை பலரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் இதுவரை எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
பண்டையகால தொழில் முறை
இனி பொறுப்பு வாய்ந்தவர்களை நம்பி எரிபொருளுக்காக காத்திருந்தால் தமது குடும்பங்கள் உணவுக்கே வழியில்லாத நிலைமை ஏற்படும்.
அதனால் தாம் பண்டையகாலத்து முறைப்படி பாய்மர படகு தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இதன் மூலம் சொற்ப அளவு வருமானத்தை மாத்திரமே பெற முடியும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
எனவேதான் தாம் படகுகளில் போர்வை, மற்றும் பலமான துணியினை கட்டி கரையோர கடற்றொழிலில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய படகுகள்
தமது கடலில் இந்திய இழுவை படகுகள் கண்முன்னே தொழில் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.