கடற்படையால் முழங்காலில் வைத்து தாக்கிய சித்திரவதை செய்த கடற்றொழிலாளருக்கு இதுவரை நீதி இல்லை!
கடற்படையினரால் தனது கணவர் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழிலாளர் குடும்பம், சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் இதுவரை உரிய விசாரணை நடத்தாமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.
மட்டக்களப்பில் செயல்படும் நேற்றுமுன்தினம் (18) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளரும் அவரது மனைவியும் இணைந்து இதனை தெரிவித்தனர்.
சித்திரவதை
அவர்களின் கூற்றுப்படி, கடந்த 5ஆம் திகதி செட்டிபாளையம் கடற்கரைப் பகுதியில், கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை புலனாய்வு பிரிவு அதிகாரியின் தலைமையில் வந்த குழுவினர், “சுருக்கு வலை பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்தார்” என்ற குற்றச்சாட்டின் பேரில் கடற்றொழிலாளாரை கைது செய்துள்ளனர்.
அப்போது, அவரை சுமார் இரண்டு மணி நேரம் முழங்காலில் அமர வைத்தபடி வெய்யிலில் அடித்து சித்திரவதை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பின்னர், அவரை களுதாவளை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று, பல மணி நேரங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் நீரிழிவு நோயால் (சக்கரை நோய்) பாதிக்கப்பட்ட நிலையில் தாக்குதலால் உடல்நிலை மோசமடைந்ததாகவும், இதையடுத்து அவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் இல் 8ஆம் திகதி முறைப்பாடு செய்த பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சட்ட மருத்துவ அதிகாரியால் தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்ட பின்னர் அவர் வெளியேறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக பல முறை அழைக்கப்பட்டபோதும், குற்றஞ்சாட்டப்பட்ட கடற்படை அதிகாரி முன்னிலையாகவில்லை என கூறப்படுகிறது.
உண்ணாவிரத போராட்டம்
10, 14 மற்றும் 17ஆம் திகதிகளில் அழைக்கப்பட்டபோதும், அதிகாரி இடமாற்றம், பயிற்சி போன்ற காரணங்களால் விசாரணை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் அடைந்த குடும்பத்தினர், மட்டக்களப்பில் உள்ள கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் சென்றும் முறையிட்டுள்ளனர். ஆனால் அங்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரியை கைது செய்ய முடியாது என கூறப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“பாதுகாப்பு படைக்கு ஒரு சட்டமும், பொதுமக்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஜனாதிபதி நல்லாட்சியை வழங்குவார் என நம்பி வாக்களித்தோம்.
ஆனால் இங்கு அந்த நல்லாட்சி செயல்படவில்லை,” என பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் குடும்பம் பெரும் மன உளைச்சலில் இருப்பதுடன், அவர்களின் இரண்டு பிள்ளைகளும் மனஅழுத்தத்தால் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால், தங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால், இன்னும் இரண்டு நாட்களுக்குள் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பம் எச்சரித்துள்ளது.